Thursday, June 5, 2008

டி.ஆரும் என் சண்டையும்

கடந்த ஞாயிற்று கிழமை காலையில் இருந்து கால்பந்து போட்டி(ஜெயித்தும் விட்டோம்), பார்ட்டி என பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து ஒரு நாலு மணிக்கு வீடு திரும்பினோம். சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு நானும் தங்கமணியும் பேசத் தொடங்கினோம். இந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே சண்டையில் வந்து முடிந்தது.

அதன் பின் இருவரும் எதுவும் பேசாமல் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல வேளையாக டிவி ரிமோட் என்னிடம் இருந்தது. இந்த மாதிரி ஏற்கனவே சண்டையில் இருக்கும் போது நாங்கள் இருவரும் ரிமோட்டுக்காக சண்டை போடுவதில்லை. நானும் சன் டிவி, விஜய் டிவி என மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தேன், நிகழவிருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை பற்றி சற்றும் அறியாதவனாய். அப்போ தாங்க அந்த சம்பவம் நடந்தது. சன் டிவியில் ஏதோ படம் ஆரம்பித்தது. சரி, இதையாவது பார்ப்போமே என்று ஆவலாக ஒலியை ஏற்றி வைத்தால், அது நம்ம டிஆரின் 'வீராசாமி'யாம். எனக்கு தூக்கி வாரி போட்டது. தமிழ்மணத்தில் ஒருவர் விட்டிருந்த எச்சரிக்கை எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது.

சரி மாற்றி விடலாம்னு நினைத்த போது எனக்கு திபீர்னு ஒரு வில்லத்தனமான யோசனை தோன்றியது. அப்பாவியான என்னிடம் சண்டை போட்ட தங்கமணியை பழி வாங்க இது தான் சரியான சந்தர்ப்பம். உடனே இன்னும் சற்று ஒலியை ஏற்றி வைத்து அதே படத்தை வைத்தேன். இந்த படத்தை பற்றி தெரியாத தங்கமணியும் ஏதோ புதிய படம் என்று ஆவலாக பார்த்துக்கொண்டிருக்க, அப்போது தான் டி.ஆரின் அறிமுகக் காட்சி. ஓர கண்ணால் தங்கமணியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை கவனித்தேன். "முழுசா சந்திரமுகியாக மாறி இருக்கும் உன் மனைவி கங்காவை பார்" என்று தலைவர் சொன்ன வசனம் நினைவில் வந்து கொஞ்சம் பயமுறுத்தியது.

இதுதாங்க அந்த அறிமுக பாடல்:



மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி ஒரு நிலைமையில் இருந்த தங்கமணிக்கு மேலும் சில அதிர்ச்சிகள். என்னன்னு கேக்கறீங்களா? அதையும் நீங்களே பாருங்கள்:

இந்த பாட்டுல என்னமா டான்ஸ் ஆடி இருக்கார் பாருங்க. விரைவில் இவர் ஜோடி நம்பர் 1னில் நடுவரா கூட வரலாம். எதுக்கும் தயாராகிக்கோங்க.



இந்த பாட்டுல அவருடைய ஸ்டைலும், அழகும் வெளிப்படும். பில்லா படத்த அஜித்துக்கு பதில் இவர் பண்ணி இருந்தா, இன்னும் டக்கரா இருந்திருக்கும் இல்ல? அதை நெனச்சாலே எனக்கு வார்த்தை வரமாட்டேங்குது.



படையப்பா படத்துல ரஜினி, ரம்யா கிருஷ்ணன் முன்னாடி ஊஞ்சல இழுத்து போட்டு ஒக்காருவாறே, அந்த காட்சி ஞாபகம் இருக்கா? இப்போ இந்த காட்சிய பாருங்க, அதை விட எவ்வளவு பிரமாதமா செஞ்சி இருக்கார் பாருங்க டி.ஆர்.


இதுல டி.ஆரின் தங்கச்சியை காதலிக்கும் இன்னொரு ஹீரோ படம் பூராவும் காதில் ஒரு சாம்பிராணி பத்தியை சொருகி கொண்டிருப்பார். படம் முடியறதுக்குள்ள அதை யாராவது கொளுத்துவாங்கனு எதிர்பார்த்தேன். கடைசி வரை யாரும் அதை கொளுத்தவே இல்லை:( எங்க இருந்து தான் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் பிடிப்பாரோ?

படத்துல உண்மையிலேயே ரொம்ப கஷ்ட பட்டு நடிச்சது மும்தாஜா தான் இருக்கும் போல. பின்ன இவர லவ் பண்ற மாதிரி இல்ல நடிக்கணும். அவங்க பேசுன ஒரு வசனம் இன்னும் என் நெஞ்சில அப்படியே நிக்குது:

"நீ என் மனச தான்யா திருடுன, ஆனா நான் நீ குளிச்சிட்டு வச்ச சோப்ப திருடி அத தேச்சி தான்யா குளிக்கிறேன்."

இதை நெனச்சி பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கே, அவங்களுக்கு எப்படி இருந்துதோ?

இப்போ நம்ம கதைக்கு வருவோம். இந்த மாதிரி தங்கமணியோட சண்டைல இருக்கும் போது, எப்பவுமே கஷ்டப்பட்டு முகத்த இறுக்கமாகவே வச்சுக்கிட்டு இருக்கணும். இல்லைனா நான் சண்டைல தோத்தது போல ஆகிவிடும். இதுக்காகவே எவ்வளவோ கஷ்டப்பட்டு என் சிரிப்பை எல்லாம் அடக்கி கொண்டு இந்த படத்தை பார்த்துகிட்டிருந்தேன். ஆனால் இந்த காட்சிகளை பார்த்துவிட்டு என்னால் தாங்க முடியாமல் சிரித்து விட்டேன். உங்களால சிரிக்காம இருக்க முடியுதானு முயற்சி பண்ணி பாருங்க.

நல்ல வேளை, பாஸ்கர் இவர பிடிச்சிருக்காரு, இல்லனா....யய்யாடி!


இந்த படத்தோட சேர்த்து இவர் மொத்தம் நாற்பதொன்பது தங்கச்சிகளை மார்மேலையும், தோள்மேலையும் போட்டு வளர்த்திருக்கார். அடுத்த படத்தோட அரை சதம் அடித்து விடுவார்.



இதை பார்த்து விட்டு தங்கமணியின் கைகள் தலைவலி தைலத்தை நோக்கி எட்டியது. நான் சிரித்ததை பார்த்த தங்கமணி, ஜெயித்து விட்ட தோரணையோடு என்னை பார்த்து "மரியாதையா சேனலை மாத்துரியானு" அன்பு கட்டளை இட்டார். நானும் படம் முடியபோவுது, கிளைமாக்ஸ் பார்த்துட்டு மாத்திடறேனு சொல்லிட்டு அந்த கொடுமையையும் பார்த்தேன். இதுக்கு மேலயும் தாங்க முடியாதுன்னு தங்கமணி எழுந்து சமயகட்டுக்குள்ள காபி போட போயிட்டாங்க. அப்பாடா எப்படியோ சண்டை தீர்ந்தது, ஆனா ஒரு சண்டே இப்படி வீணாகி போச்சே!

நீங்க எங்க போறீங்க. இருங்க, தயவு செய்து இதையு பார்த்துட்டு போங்க. இவ்வளோ கொடுமையையும் பார்த்த நீங்க, இத பார்க்க மாட்டீங்களா? படத்துல ஒருவிதத்துல ரொம்ப ஆருதாலான காட்சியே இதுதாங்க. ஏன்னா அவரு அபீட் ஆயிடுவாரு. எவ்வளவு வித்தியாசமா எடுத்திருக்கார்னு பாருங்க. இதுவரை தமிழ் சினிமாவில் இது மாதிரி துணிச்சலான கிளைமாக்ஸ் யாரும் வச்சு இருக்க மாட்டாங்க. வழக்கமா படத்துல கணவர் இறந்ததும், மனைவி அப்படியே கணவர் மேல விழுந்து உசுர விட்டுடுவாங்க. ஆனா இந்த படத்துல டி.ஆர் இறந்ததும், அவருடைய எதிர் வீட்டு காரரோட பொண்டாட்டி, அதாங்க மும்தாஜ் உசுர விடறாங்க. ச்சே, 'அந்த ஏழு நாட்கள்' படத்தோட கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு கிளைமாக்ஸ்ஸா?




விகி(wiki)லையும் போயி இவர கலாய்ச்சது யாருன்னு தெரியலைங்க. விகிய படிச்சுட்டு என்னால நம்பவே முடியல. நீங்களே பாருங்களேன்.

4 comments:

FunScribbler said...

ஹாஹா.. பிரிச்சு மேஞ்சிருக்கீங்க போல தெரியுது! செம்ம காமெடிங்க உங்க பதிவு.

//இந்த படத்தோட சேர்த்து இவர் மொத்தம் நாற்பதொன்பது தங்கச்சிகளை மார்மேலையும், தோள்மேலையும் போட்டு வளர்த்திருக்கார். //

விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்!!

Sathiya said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தமிழ்மாங்கனி. பிரிச்சு மேஞ்சதுக்கப்புறம் அவர நெனச்சா பாவமா இருக்குங்க. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரே!

தமிழினி..... said...

nalla comedy sathiyaa...sorry sathya ...konja naala padivugal pakkam vara mudileh...inime thamizhini correct ah attendance pottruvaa...oru sample ku..."Ullenayyaa!!!"

:)))))))))

Sathiya said...

வாங்க தமிழினி! என்னடா ரொம்ப நாள் ஆள காணோமேன்னு பார்த்தேன். எப்படியோ வந்துட்டீங்க, மகிழ்ச்சி! கருத்துக்கு நன்றி!