Thursday, May 21, 2009

நடிகர் சிரஞ்சீவி தேர்தலில் தோற்றது ஏன்?

ஆந்திராவில் நடந்த தேர்தலில் சிரஞ்சீவி கட்சி 294 தொகுதிகளில் வெறும் 18 சட்டசபை தொகுதிகளில் தான் வென்றது. ஒரே ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.

இவர் தோல்வியை இவரது ரசிகர்களே பல இடங்களில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி உள்ளனர். ஏனென்றால் இவர் அரசியலில் வெற்றி பெறுவதற்கு முன்பே சட்டசபை தொகுதிகளில் அவரது கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு மூன்று முதல் ஐந்து கோடி வரை வாங்கி இருக்கிறார். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒவ்வொரு தோற்றுப்போன கட்சியும் கண்ணா பின்னாவென்று யோசித்து கொண்டிருக்க, இவர் மட்டும் தனது கட்சியின் தோல்விக்கான காரணத்தை அறிய ஒரு புதிய முறையை கையாண்டிருக்கிறார்.

அவர் தோல்விக்கான காரணம் பற்றி அறிய 10 வாஸ்து ஜோதிட நிபுணர்களை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கட்சி அலுவலகம் முழுவதும் பார்வையிட வைத்திருக்கிறார். அவர்கள் சிரஞ்சீவியிடம், நீங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு எந்த வழியை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் பின்புற வழியை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே வாஸ்து நிபுணர்கள் அவரிடம், முதலில் பின்புற வழியை அடைத்து விடுங்கள். நீங்கள் கட்சி அலுவலகத்தில் பின்புற வழியை பயன்படுத்தியது தான் தோல்விக்கு காரணம். இனி நீங்கள் முன்புற வழியை மட்டுமே பயன் படுத்தவேண்டும் என்றனர். மேலும் அலுவலகத்தில் சிரஞ்சீவி அமரும் திசைகளையும் மாற்றினர். மேலும் அவரைப்பார்க்க வரும் தொண்டர்கள் காத்திருக்கும் அறையிலும் சிறிது மாற்றம் செய்தனர். பின்னர் வாஸ்து நிபுணர்கள் சிரஞ்சீவி அலுவலகத்தில் உள்ள வாஸ்து குறைபாட்டை சரி செய்து விட்டதாகவும், அடுத்த தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளனர். அடப்பாவீங்களா!

நல்ல வேளை ஆந்திரால ஒரு கண்ணகி சிலை இல்லை. இருந்திருந்தா இன்னொரு புது பிரச்சனை வந்திருக்கும் போல! எதற்கும் கையை நீட்டிட்டு நிக்கிற மாதிரி ஏதாச்சும் என்.டி.ஆர். சிலை இருக்கானு பாருங்க. என்ன இருந்தாலும் நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இதை கவனிக்கவும். உங்க அலுவலகத்தில் கூட வாஸ்து பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறேன். அட உங்க அலுவலகத்தை தான் பாதி இடிச்சிபுட்டாங்களே...ஒரு வேளை அது தான் காரணமோ? நல்லா பிளான் பண்ணி தான்யா செஞ்சிருக்காய்ங்க!

Saturday, March 21, 2009

என்ன அழகு எத்தனை அழகு!

அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.

இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.

இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(




Saturday, November 1, 2008

இவங்க இன்னும் திருந்தலையா?

ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தியா போச்சு! அதான் வலைப்பூ பக்கம் வர முடியல. தினமும் இந்த பேங்க் ஊத்திகிச்சு, அந்த பேங்க் ஊத்திகிச்சுன்னு சொல்லி பீதிய வேற கிளப்பறாங்க. அடுத்த வருஷம் இதை விட மோசமா இருக்கும்னு வேற சொல்றாங்க. இந்த மாதிரி நிலமையில ஓபாமா வந்து என்ன செய்ய போறாரோ?


இப்போவெல்லாம் டிவி கூட அவ்வளவோ பார்க்கறது இல்ல. அப்படியே பார்த்தாலும் விஜய் டிவி தான். சரி, சன் டிவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, எப்படி போயிட்டிருக்குன்னு பார்ப்போம்னு ஒரு நாள் சும்மா சேனலை மாத்தி பார்த்தேன். ஏதோ ஒரு மெகா சீரியல் போயிட்டிருந்துது. ஒரு அம்மா கீழ ஒக்காந்துட்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அவங்க பையன் அவங்களை சாப்பிட கூப்பிடறான். அதுக்கு அந்த அம்மா, "அக்கா ஜெயில்ல இருக்கும் போது எப்படிடா சாப்பிட முடியும்?னு" சொன்னாங்களோ இல்லையோ, வுடுங்கடா சாமின்னு சேனலை மாத்திட்டேன்!


அடப்பாவீங்களா....இன்னும் இந்த மாதிரி தான் ஓட்டிட்டு இருக்கீங்களா? கீழ இருக்க இந்த வீடியோ காட்சியை பாருங்க. இதுல பேசிட்டு இருக்கறது ஒரு பாட்டியும் அவங்க பேத்தியும். இரண்டு பேறும் கணவனை இழந்தவர்கள். ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க;)


Monday, September 15, 2008

PiT மெகாப் போட்டி 2008 ~ இறுதிச் சுற்று!

போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு

இன்றோடு பிட் மெகா போட்டியில் பங்கு பெற கடைசி தினம் என்பதால், நினைத்ததை எடுக்க முடியாமல், எடுத்ததை பதித்து விட்டேன்.

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.


Seoul Palace



London Westminster

Pagodas

Petronas Tower

மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Wednesday, August 13, 2008

குசேலன் - ஒரு திருவிளையாடல்

திருவிளையாடலுக்கும், குசேலனுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒன்னும் இல்ல. சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து, எனக்கு கிடைத்த நம்பத்தகுந்த செய்தி இது. அதாவது இந்த குசேலன் படம் சூப்பர் ஸ்டாரின் திருவிளையாடல்களுள் ஒன்றாம்.

எல்லா சக நடிகர்களும்(தேவர்களும்), சில அல்லக்கைகளும் சென்று சூப்பர் ஸ்டாரிடத்தில் முறையிட்டுள்ளனர். தங்கள் படங்கள் சூப்பராக இருந்தும் சுமாராகவே ஓடுகிறதாகவும், டீ ஆத்தறவனெல்லாம் திரை விமர்சனம் பண்ணி படத்தை ஓட விடாம பண்ணிடரதாகவும், இதற்கு சூப்பர் ஸ்டார் தான் ஒரு வழி பண்ண வேண்டும் என்றும் முறையிட்டுள்ளனர். குருவி, இந்திரலோகத்தில் ந அழகப்பன், அரசாங்கம் போன்ற பல படங்கள் இதனால் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிவாஜி, தசாவதாரம் படம் கூட நல்லா இல்லைன்னு பலர் எழுதி இருப்பதை அவரிடத்தில் காட்டி இருக்கிறார்கள்.

வெகுண்டு எழுந்த ரஜினியும் உண்மையிலேயே ஒரு மட்டமான படம்னா அது எப்படி இருக்கும்னு மக்களுக்கு புரிய வைக்க தீர்மானித்தார். இப்படி தீர்மானித்தவுடனே அவரின் மனதில் தோன்றிய முதல் இயக்குனர் பி.வாசு தான். இருப்பினும் பேரரசுவும் பி.வாசுவுக்கு ஒரு நல்ல போட்டியாக இருந்திருக்கிறார். ஆனால் பேரரசு தன் கதைக்கு கண்டிப்பாக 'பெங்களூரு' என்று தான் பெயர் வைப்பேன் என்று அடம் பிடித்ததால் அடித்தது யோகம் பி.வாசுவிற்கு. பி.வாசுவும் தன் கையில் கிடைத்த பூ மாலையை சும்மா பிரிச்சி மேய்ந்திருக்கார். நடிப்பிற்கு பசுபதியும், எரிச்சலுக்கு வடிவேலுவும், கடுப்பிற்கு மீனாவும், அறுவைக்கு மற்ற எடுபிடிகளும், ஆறுதலுக்கு சூப்பர் ஸ்டாரும், கிளு கிளுப்பிற்கு நயன்தாராவும், ஒப்புக்கு சப்பாவிற்கு பிரபுவும் இருக்க மொக்கையான இசையுடன் படு மொக்கையா எடுத்த படம் தான் குசேலன்.

இப்படி ஒரு படம் எடுக்க செய்து, தனது இந்த திருவிளையாடல் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் சூப்பர் ஸ்டார். படத்தை பார்த்திருந்தீங்கனா உங்களுக்கு அது புரியும். பலர் இந்த படத்தை பார்த்து விட்டு குருவியை கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று சொல்வதே இதற்கு சான்று.

இதை எல்லாம் தெரியாமல் அப்பாவியாக சென்று படத்தை பார்த்து விட்டு வந்தவன் நான். இதற்கு காரணம் இந்த விமர்சனம் தான். நான் முதன் முதலாக குசேலனை பற்றி படித்த விமர்சனம்:

Stupendous! Marvelous! Wordless! It’s so surprising to see that Director Vasu has churned out a best movie in his entire career.......
Verdict: Strictly recommended to watch

எந்த புண்ணியவானோ படத்தை பார்த்துட்டு, வேணும்னே இப்படி எழுதி பல பேரை சிக்க வச்சிருக்கார். நல்லா இருங்கையா! "First impression is the best impression" இல்லையா! நானும் இதுக்கு அப்புறம் சில நேர்மாறான விமர்சனங்களை படித்தும் மனம் ஒத்துகொள்ள முடியாமல்(தலைவர் படமாச்சே) படத்துக்கு போயிட்டேன். கடைசியில் பட்டால் தான் தெரியும் என்பது நிஜமாகி விட்டது.

படத்துக்கு எனது நண்பர்களையும் அழைத்து சென்றிருந்தேன். நண்பர் ஒருவரின் ஐந்து வயது மகனை முதல் முறையாக திரையரங்கிற்கு அழைத்து சென்றோம். அவன் 'சிவாஜி' படத்தை நல்லா ரசித்து பார்த்தான் என்று சொன்னார்கள். சரி என்று அவனை தைரியமாக அழைத்து சென்றோம். படம் ஆரமிச்சு ஒரு அறை மணி நேரம்தான் இருக்கும், பையன் தூங்கிட்டான். இனிமே அவன் படம் பார்க்க கூட்டிகிட்டு போனா வருவானா?

படம் முடிஞ்சி நைட் வெளிய வரும்போது மணி பத்து. வெளியில அடுத்த ஷோ பார்க்க ஆவலா நின்னுகிட்டு இருந்தவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருந்துச்சு. பின்ன, நாங்களாச்சும் ஏழு மணி ஷோ, அதுக்கே எங்களால முடியல.

இது வரை இப்படி ஒரு மொக்கை படத்தை நான் தியேட்டர் சென்று பார்த்ததே இல்லை. ஒரு டாகுமெண்டரி படம் கூட இன்னும் நல்லா இருந்திருக்கும். பி.வாசு வாழ்க! நான் தலைவர் படத்தை பற்றி இப்படி எழுதுவேன் என்று நினைக்கவேயில்லை:( மொத்தத்தில், குசேலன் = இரண்டு வீராசாமி!

Saturday, July 26, 2008

1992ல் ஒரு நாள்

அம்மா காலைல ஏழு மணிக்கு சரியா எழுப்பிடுங்கனு சொல்லிட்டு தூங்க சென்றான் ராமு. அவன் சென்ற அடுத்த நிமிடம், அவன் சொன்னதை டிவி பார்த்து கொண்டே கேட்டு கொண்டிருந்த அவனது அண்ணன் சோமு தன் அம்மாவிடம் ஓடி வந்து, "அம்மா என்னையும் ஏழு மணிக்கு எழுப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு தூங்க சென்றான்.

மறுநாள் காலை தனது உள்ளுணர்வு எழுப்பி விட 6.45 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. பின்னர் அம்மா வந்து எழுப்பியதும் எழுந்த ராமு, சோமு ஏற்கனவே எழுந்து விட்டதை பார்த்து கடுப்பாகி போனான். இவர்களை காம்பிளான் குடிப்பதற்காக பல் துலக்க சொல்லி அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காமல் மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.

கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அவர்களின் முகத்தில் தெரியும் பரபரப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ராமு சற்று வேகமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தனது இறந்து கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு நின்றிருந்தான். ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் அவசரத்தை(புரியுதில்ல?) அடக்க முடியாதுன்னு சொல்வாங்க இல்ல, ஆனால் ராமு அவனது இந்த உத்தியின் மூலம் அதையும் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணியோசை அடிக்கும் சப்தம் கேட்டு இருவரும் விழுந்ததித்து கொண்டு கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். முட்டி மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கொண்டு ஓடி சென்றவர்கள் அதே வேகத்தில் உள்ளே ஓடி வருகிறார்கள். முதலில் வந்த சோமு(பெரியவன் ஆயிற்றே) ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்கிறான்.

தனக்கிருந்த முழு கடுப்பில் அழுது கொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டான் ராமு, "அம்மா! பாரும்மா சிறுவர் மலரை சோமு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போயிட்டாமா. தர சொல்லுங்கம்மா!"

(பி.கு. இதுல வர அந்த சோமு நான்தாங்க. இந்த சிறுவர் மலருக்காகவே எங்க அப்பா கிட்ட கேட்டு, அந்த ஒரு நாள் மட்டும் தின மலர் வாங்குவோம். அதுக்கு அப்படி ஒரு சண்டை போடுவோம்;)

Thursday, July 24, 2008

சிங் இஸ் கிங்

இது அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சிங் இஸ் கிங்' படத்தின் விமர்சனம் இல்லைங்க, நம்ம மன்மோகன் சிங்கை தான் இப்போ நிறைய பத்திரிகைகள்ல இப்படி போட்டிருக்காங்க.


சும்மா சொல்ல கூடாது மனுஷன் சாதிச்சு காட்டி இருக்கார். தன்னை பலவீனமான பிரதமர் என்று கூறியவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கார். ஆனால் இனிமேல் தான் அவர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட்களின் தொல்லை இனிமேலும் தொடரும். அதை எல்லாம் எதிர்த்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அதனால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்பாட்டை நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார். அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.


அவரை பாராளுமன்றத்தில் பேச விடாமல் கூச்சலிட்டதால் அவரது தனது உரையை படிக்காமல் சமர்ப்பித்து விட்டார். ரொம்ப வலிமையான உரை. அதை படிக்க இங்கே கிளிக்கவும்.


மன்மோகன் சிங்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு உபரி தகவல். இப்பொழுது இந்தியா இந்தளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி, நாமெல்லாம் கணினி துறையில் இந்தளவுக்கு சம்பாரித்து கொண்டிருக்கிறோம் என்றால், அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்.

**********

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்று தெரிந்ததோ என்னவோ, பாராளுமன்றதிற்குள் பணத்தை எல்லாம் கொண்டு வந்து திசை திருப்ப பார்த்தார்கள். இப்போ யாரை பார்த்தாலும் குதிரை பேரம், குதிரை பேரம் என்று அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள். இது இரு தரப்பிலும் நடந்த விஷயம் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் சொல்ல போனால் எதிர் கட்சியினருக்கே இதன் அவசியம் அதிகம்.


இதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு ஒரு சந்தேகம். லஞ்சம் கொடுத்தவரை விட வாங்கினவரை தானே எப்பொழுதும் குறை கூறுவார்கள். இங்கே மட்டும் ஏன் தலை கீழாக நடக்குது? நாட்டை பற்றியும் கவலை இல்லாமல், தனது கட்சியை பற்றியும் கவலை இல்லாமல் இப்படி பணம் வாங்கும் மந்திரிகளை குறை சொல்வதை விடுத்து மற்றவரை குறை சொல்வதில் என்ன ஞயாயம்?

**********

இவ்வளவு தீவிரமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், தனியாக தமாஷ் பண்ணி கொண்டிருக்கிறார் அத்வானி அவர்கள். இவர் நேருஜியும், மொரார்ஜி தேசாயும் '' ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சொல்ல போக, அதற்கு பிரணாப் முகர்ஜி நேரு இறந்து போனது ''ல் '' ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது ''ல் தான், இறந்து போன நேரு எப்படி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருக்க முடியும் என்று கேட்டு மூக்கை உடைத்திருக்கிறார். வாஜ்பாய் கிட்ட இருந்த கொஞ்சமாவது இவர் கற்று கொண்டிருக்கலாம்.

**********

இன்னொரு பக்கம் லாலு 'இடது சாரிகள் மரக்கிளை நுனியில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிபாகத்தை வெட்டுகிறார்கள்' என்று ஜோக் அடித்து காமெடி பண்ணி இருக்கார். யார் எவ்வளோ கூச்சல் போட்டாலும் இந்த மனுஷன் பேசும்போது மட்டும் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு பேச்சை கேட்டு சிரித்து ரசிக்கிறார்கள். உண்மையிலேயே திறமையான மனுஷன் தான்.

**********

இப்போ இடது சாரிகள், மாயாவதி என்று ஒரு பத்து கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு மூனாவது அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளோ நாள் தாக்கு பிடிக்கும் தெரியுமா? யார் பிரதமந்திரி வேட்பாளர் என்று முடிவாகும் போது பாதி பேரு பிச்சிகிட்டு போய்டுவாங்க. சீனா இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டு விட்டார்கள். நாம் கையெழுத்திடுவதற்கு மட்டும் இந்த இடது சாரிகள் எதற்கு இப்படி பிரச்சனை செய்கிறார்கள்?

**********

இன்னொரு விஷயத்தை பற்றி இப்போ தான் நான் கேள்வி பட்டேன். இதுவும் லாலு பாராளு மன்றத்தில் கூறியது தான். கிருஷ்ணர் தூக்கிய கோவர்தன மலை தெரியுமல்லவா? அதை அந்த ஊரில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அதில் கிடைக்கும் கணிமங்களுக்காக குடைந்து கொண்டிருக்கிறதாம். நம்ம ஊரில் சேது பாலத்துக்கு இராமர் பெயரை இழுத்து பிரச்சனை பண்ணியவர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்?

**********

அப்புறம் இன்னொரு காமெடி என்னவென்றால், சமாஜ்வாடி மந்திரி(அதீக் அகமது) ஒருத்தர் அணுசக்தி ஒப்பந்தம் தலையும் புரியலை, வாழும் புரியலை என்று கூறி உள்ளார். இப்படி இருக்கும் பொழுது நாட்டு மக்களுக்கு எப்படி புரியும் என்று கேட்டுள்ளார். நாட்டு மக்கள் இருக்கட்டும். இவருக்கு புரியலைன்னு சொல்றார் பாருங்க, அடங்கப்பா! இங்க இவ்வளோ பிரச்சனை நடந்துட்டிருக்கு, ஏதோ ஒரு ஊர்ல ஆணி புடிங்கிட்டிருக்க நாமலே அது என்ன ஏதுன்னு தேடி கண்டு பிடிச்சி தெரிஞ்சிக்கிறோம், இவர் இவ்வளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தாரோ? இவரும் ஒரு மத்திய மந்திரி.

Monday, July 21, 2008

ஒரு சமூக சேவகரின் டைரி குறிப்பில்...

ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரின் திறமையும் சரி, ஒரு நல்ல நடிகர் அல்லது பாடகரின் திறமையும் சரி, அவர்களின் சிறு வயதிலேயே வெளிப்படும். அது போல் ஊருக்கு உழைக்கும் ஒரு சமூக சேவகரின் சமூக சேவையும் அவரது சிறு வயதில் இருந்தே தொடங்கிவிடும். அப்படி பட்ட ஒரு சமூக சேவகரின் சிறு வயதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வினை பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னையில் தான். இவரது ஊருக்கு உழைக்கும் பணி சிறு வயதில் இருந்தே தொடங்கிற்று. இவர் வசித்து வந்த தெருவில் யாருக்கு என்ன வேலை ஆக வேண்டி இருந்தாலும் இவரை கூப்பிட்டு தான் செய்ய சொல்லுவார்கள்.

காய்கறி அங்காடிக்கு சென்று கை கறிகள் வாங்க வேண்டுமா, மாவு மில்லுக்கு சென்று மாவு அரைத்து கொண்டு வரவேண்டுமா, ரேஷன் கடைக்கு சென்று பொருகள் வாங்க வேண்டுமா, இவை அனைத்திற்கும் அத்தெருவில் இருப்பவர்களின் நினைவிற்கு முதலில் வருபவர் இவர் தான். தான் விளையாடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் விளையாட்டை நிறுத்தி விட்டு சென்று அந்த வேலைகளை முடிப்பார். அவர்கள் புகழ்ந்து கூறும் இரு வார்த்தைகளே இவருக்கு டானிக். தன் அம்மாவே எத்தனையோ முறை கண்டித்தும் இவரது இந்த பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர் இவ்வளவு உதவிகள் செய்தும், மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த உதவி இது தான்:

ஒரு நாள் இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள நண்பர் ஒருவர் அனுப்பிய ஆள், இவர் வீட்டிற்கு வந்து இவரது அம்மாவிடம் நூறு ரூபாய் கொடுத்தால் ரேஷன் கடையில் இருந்து அட்டை இல்லாமல் சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்கி தருவதாக சொன்னார். அவர் அந்த ரேஷன் கடையில் வேலை பார்ப்பவர் ஒருவரின் சொந்தக்காரர் என்பதால் அது சாத்தியம் என்றார். அப்பொழுதெல்லாம் ரேஷன் கடையில் சர்க்கரையும், மண்ணெண்ணையும் தான் ரொம்ப டிமான்ட். எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வச்சுக்குவாங்க.

சரி என்று இவரது அம்மாவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அந்த நபரிடம் நூறு ரூபாய் பணம் கொடுத்து, ஒரு மஞ்சா பை மற்றும் கிருஷ்ணாயில் கேனுடன் தன் மகனையும் உடன் அனுப்பி வைத்தார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர் அச்சிறுவனிடம் வேறு யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூட அவர்களுக்கும் வாங்கி கொடுக்கலாம் என்றார். நம்ம ஆள் தான் ஊருக்கு உழைப்பவர் ஆயிற்றே. அக்கம் பக்கத்தில் இருக்கும் தெரிந்தவர்களின் வீட்டிற்கு எல்லாம் அழைத்து சென்று அனைவரிடமும் பணமும், கிருஷ்ணாயில் கேனும், பையும் வாங்கி கொண்டார்கள். அனைவருக்கும் உதவி செய்வதை நினைத்து பெருமையுடன் ரேஷன் கடையை நோக்கி நடை போட்டார்.

ரேஷன் கடை நெருங்கியதும், அந்த நபர் இவரிடம் உள்ள கேன் மற்றும் பைகளை வாங்கி கொண்டு இவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான். இவர் உடன் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அவ்வாறு கூறினான். அனைவருக்கும் உதவிய மன நிறைவில் இவர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டார்.

விளையாடி முடித்து ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டில் இன்று தனக்கு தனி மரியாதை கிடைக்கும் என்ற பெருமிதத்துடன் சென்றார். அப்பாவும், அம்மாவும் இவருக்காக கேட்டின் அருகிலேயே காத்து கொண்டிருந்தனர். இவரை கண்டதும், இவரின் அப்பா "எங்கடா போன இவ்வளோ நேரமா?" என்று கேட்டார். இவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு வருவதாக சொன்னார். பின் உள்ளே வாடா என்று சொல்லி விட்டு போன தந்தையை பின் தொடர்ந்தார்.

இவர் உதவி செய்த யாரோ ஒருவர் இவரை பார்க்க உள்ளே இருக்கார் போல என்று ஆவலாக சென்றார். உள்ளே சென்று தன் தந்தையிடம் அறை மணி நேரம் ரிவிட் வாங்கிய பின் தான் இவருக்கு அந்த ரேஷன் கடை நபர் ஒரு ஏமாத்து பேர் வழி என்று தெரிந்தது. அம்பையே இந்த வாங்கு வாங்குறாரே அப்பா, எய்த வில்லை என்னா வாங்கு வாங்கி இருப்பார் என்று பரிதாபமாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் அம்மாவை நினைத்து மனதை தேற்றி கொண்டார்.

இதுக்கப்புறமாவது இவரிடம் வேலை வாங்குவதை நிறுத்தினார்களா? இல்லை. இவரால் ஏமாந்து போனதால் அதை சரி கட்டுவது போல் இன்னும் அதிகமாக வேலை வாங்க ஆரமித்து விட்டார்கள். இப்படி தன் சிறு வயதிலேயே தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்ட அந்த தியாகி வேறு யாரும் இல்லை, அடியேன் தாங்க!

பி.கு. மொக்கைக்கு மன்னிக்கவும்;)

Friday, July 11, 2008

இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி

போட்டி தலைப்பு: இரவு நேரம்
முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.

இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?
இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!
Moon by Night

Tokyo Tower

Anderson Bridge

Night Shot

The Devil's Tree

மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Saturday, July 5, 2008

அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான் - திரு அப்துல் கலாம்

அணுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா என்று ரொம்ப நாளா எனக்கு குழப்பமாகவே இருந்தது. அதுக்கு தான் என் வலைப்பூவில் கூட ஒரு ஓட்டு எடுப்பை போட்டு பார்த்தேன். ஆனால் இப்போ எனக்கு அது தெளிவாகி விட்டது.

இது வரை அணுசக்தி பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இதைப்பற்றி நிறைய அறிக்கைகள் விட்டுள்ளார்கள். அதை எல்லாம் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. இப்பொழுது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அணுசக்தி ஒப்பந்தம் சரிதான் என்று சொல்லியுள்ளார். இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களில் நான் பெருதும் மதிப்பவர் திரு அப்துல் கலாம் அவர்கள். அவர் ஜனாதிபதியாக இருக்கும் பொழுது தனது உறவினர்கள் வந்து தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் தங்கியதற்கு வாடகை கொடுத்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேல், இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தின் தந்தை அவர்.

அவரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை தான் படித்து பார்த்ததாகவும், அது தேசிய நலனுக்கு நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் திரு முலாயம் சிங்க் மிகவும் நல்ல காரியத்தை செய்துள்ளார். இதை வேறு யாரவது முன்னமே செய்திருக்கலாம். முலாயம் சிங்க் தனக்கு தெரியாத விவரங்களை, விவரம் தெரிந்த ஒருவரிடம் கேட்டு அறிந்துள்ளார். விஷயமே தெரியாவிட்டாலும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில், இவர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.

இதற்கு இடது சாரிகள் என்ன சொல்ல போகிறார்களோ?