Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - ஷார்ப்பு

பல மாதங்களுக்கு பின் ஒரு பதிவு போடலாம்னு தோனுச்சு. இத்தனை நாள் கண்ணா பின்னாவென்று ஆணி புடுங்கியதால் பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. அது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வந்து கணினியில் உட்கார என் ஒன்றரை வயது மகளும் அனுமதிப்பதில்லை.(என் மனைவி மட்டும் எப்படி தான் facebookல game ஆடறாலோ:) வருட கடைசி என்பதால் இப்போ ஆணி புடுங்கற வேலை கொஞ்சம் கம்மிதான். இருப்பினும் இந்த பதிவை வீட்டில் இருந்து தான் எழுதுகிறேன், என் மகள் தூங்கிய பின். இப்போ தான் மன்மதன் அம்பு முதல் நாள் முதல் காட்சி பார்த்துட்டு வரேன். சரி இந்த படத்தின் விமர்சனத்தையே போட்டுடலாம்னு எழுத ஆரமிச்சிட்டேன்.

இந்த படம் நாளை தான் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. இங்கு (சிங்கப்பூரில்) எப்போதும் ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகி விடும். எந்திரனும் இப்படி தான் பார்த்தோம். ஆனால் எந்திரன் இணையதளம் வழியாக பதிவு செய்யும் பொழுது முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. இந்த படத்திற்கோ வெறும் எட்டு சீட்டுகளே பதிவாகி இருந்தது. இது கொஞ்சம் யோசிக்க வைத்தது, இருப்பினும் கமல், கே.ஸ். ரவிக்குமார் காம்பினேஷன் ஆச்சே. சரின்னு புக் பண்ணிட்டேன்.

படம் சூப்பரா இருந்ததுன்னு சொல்வதை விட நல்ல டைம் பாஸ், நல்லா மனசு விட்டு சிரிக்க முடிஞ்சிது. தெனாலி, பஞ்சதந்திரம் அளவுக்கு காமெடி இல்லைனாலும் படம் நல்லா தான் இருந்தது. கண்டிப்பா ஹிட் ஆகும். கமலோட நடிப்பு ரொம்ப எதார்த்தம். உண்மைய சொன்னா படம் முழுக்கவே ரொம்ப யதார்த்தமா தான் இருந்தது. ரொம்ப சினிமாத்தனமா தெரியல.

படத்துல ஒரு நடிகையாகவே வராங்க த்ரிஷா. அதனால சூர்யா ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் வேற. த்ரிஷாவ காதலிச்சு கட்டிக்க போற வேஷத்துல மாதவன். இவங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை வந்து பிரிஞ்சு போறாங்க. தன் தோழி சங்கீதாவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் த்ரிஷாவை வேவு பார்க்க மாதவன் அனுப்பும் நபர்தான் கமல். முன்னாள் ராணுவ மேஜர்.

ரமேஷ் அர்விந்த் கமலின் நண்பராக வந்து கலக்கி இருக்கார். இதுவரை அவர் நடித்ததிலேயே எனக்கு பிடிச்சது இதுதான். ரொம்ப இயல்பா செய்திருந்தார். முதல் காட்சியிலேயே கண்களை கலங்க வைத்து விட்டார். கமலுக்கும் இவருக்கும் உள்ள நட்பை மிக மிக அழகாக காட்டி இருந்தார்கள்.

இன்னொரு விஷயம் த்ரிஷா உள்பட படத்துல எல்லோரும் சொந்த குரலிலேயே பேசி இருக்கிறார்கள். த்ரிஷா கவிதை சொல்வது மட்டும் கொஞ்சம் காமெடியா இருந்துச்சு, மற்றபடி ஓகே. மாதவன் வழக்கம் போல நல்லா பண்ணி இருக்கார். கமல் படத்துல இவர் எப்பவுமே கலக்குவார். த்ரிஷாவும் ரொம்ப இயல்பா நடிச்சிருக்காங்க. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரியுது. சங்கீதா முதல் பாதியில் சும்மா ஒப்புக்கு சப்பா மாதிரி தெரிஞ்சாலும், இரண்டாவது பாதியில் கலக்கிட்டாங்க. அவங்க பயனா வர வாண்டும் நல்லா பண்ணி இருக்கான்.

அப்புறம் கலவாணி புகழ் ஓவியா கொடுத்த பில்ட்-அப்ப பார்த்தவுடனே, அவங்க தான் இரண்டாவது கதாநாயகி என்று நினைத்தேன். கடைசீல அவங்க படத்துல வாம்மா மின்னல் மாதிரி தான் வந்துட்டு போறாங்க. அவங்க வர்றது ரெண்டே காட்சி, அதுல அவங்க டயலாக் பேசுன மாதிரி ஞாபகமே இல்லை. Cochin ஹனீபா இல்லாத குறையை ஒரு புது மலையாள நகைச்சுவை நடிகர் ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கார். இருப்பினும் அவர் செய்வது ஹனீபாவையே நினைவூட்டுகிறது.

இந்த படத்துக்கு கமலே வசனம் எழுதி இருக்காரு Crazy மோகன் கிடையாது. அதனால வசனங்கள்ல அந்த கடி ஜோக்ஸ் இல்லை, புத்திசாலி தனமா இருந்துச்சு. உதாரணத்துக்கு பொண்ணுங்க மனசு தனக்கு 33% ஆவது புரியும்னு த்ரிஷாவிடம் சொல்லுவது. நீல வானம் பாடல் மனதை வருடுகிறது. கமலின் பிளாஷ் பேக் முழுவதும் ஒரு பாடலில் பின்னோக்கியே காட்டி இருக்கிறார்கள். இது ரொம்ப வித்தியாசமாக, நல்லா இருந்துச்சு. வெளி நாடுகளில்(France, Venice etc) மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் படம் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய படம். கமல் படம் என்று பயப்படாமல் சின்ன பசங்களையும் கூட்டிட்டு போகலாம்:)

Monday, February 1, 2010

குழுப் போட்டி - சிங்கை குழு (Uniquely Singapore)

குழு போட்டிக்காக சிங்கை குழுவின் செயல்பாடுகளையும், தற்போதைய நிலவரத்தையும் தெரிவிப்பதற்காகவே இந்த பதிவு. குழு போட்டியில் வேறு ஏதும் முன்னேற்றம் இருப்பதாக தெரியல, அதான் இப்படி ஒரு பதிவ போட்டு தெரிஞ்சிக்கலாம்னு....

சிங்கை குழுவில் நாங்க ஒரு எட்டு பேர் இருக்கோம். என்னை ஒருங்கினைப்பாளரா, நாம எல்லாரும் சேர்ந்து பண்ணுவோம்னு நான் சொல்லியும் கேட்காம தேர்வு செஞ்சிட்டாங்க;) இப்போ தான் எதுக்குன்னு புரியுது....இவங்க எல்லாரையும் ஒருங்கிணைப்பது ரொம்ப கஷ்டமப்பா:)

சரி இந்த போட்டிக்காக நாங்க போட்ட திட்டம் இது தான்.
1. முதலில் நாங்க தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஒரு குழு மின்னஞ்சல் முகவரி உருவாக்குதல். (pit-singapore@googlegroups.com)
2. படங்களை பதிவேற்ற பிலிக்கர் மற்றும் பிகாசாவில் ஒரு பொது ஆல்பம் உருவாக்குதல்.

http://www.flickr.com/photos/uniquelysingapore/

http://picasaweb.google.com/unique.singapore


3. அனைவரும் முதலில் தங்களது படங்களை பிலிக்கரில் பதிவேற்ற வேண்டும். அதை நாங்கள் எங்களுக்குள் விமர்சனம் செய்து கொள்வோம்.
4. பின்னர் ஒரு rating வைத்து டாப் 50 படங்களை பிகாசாவில் பதிவேற்றி, அதை போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

சிங்கப்பூர் பற்றி ஒரு போட்டோ புக் போடணும்னா, முழு சிங்கப்பூரையே இந்த ஐன்பது படங்களில் அடக்க வேண்டும். அதற்காக எங்களால முடிஞ்ச வரைக்கும் இங்குள்ள அணைத்து இடங்களையும், இங்கு வாழும் பல்வேறு இன மக்கள், அவர்களின் விழாக்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை இதில் அடக்க முயற்சிக்கிறோம்.

நாங்க ஒரு இரண்டு, மூன்று பேர் சேர்ந்து இதுவரை 54 படங்களை பிலிக்கரில் பதிவேற்றி இருக்கோம். மற்றவர்களும் இனிமேல் பதிவேற்றுவார்கள் (செய்வீங்க இல்ல?;)

எங்க குறிக்கோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். யார் இந்த போட்டில கலந்துக்கலைன்னாலும், நாங்க தனித்து போட்டியிட்டாவது எப்படியாவது முதல் இடத்தை பிடித்து விட வேண்டும்:)