Wednesday, June 25, 2008

மெகா சீரியல் வோட்டு!

(பெப்சி உமா தோரணையில்)என்னை ரொம்ப ஆச்சர்ய பட வைக்கிற விஷயம், எப்படி எல்லாருக்கும் ஒரே விஷயம் பிடிசிருக்குன்றது தான். இந்த மெகா சீரியல் விஷயத்துல நாமெல்லாம் ரொம்ப தெளிவாதான் இருக்கோம்! மேலே படத்தில் உள்ள வோட்டுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

என்பத்தேழு ஓட்டுல எழுபத்தோரு பேர் 'இது எல்லாமே கொடுமைதான்'னு வோட்டு போட்டிருக்காங்க. எவ்வளோ பீல் பண்ணி இதை போட்டிருப்பாங்கன்னு எனக்கு புரியுது. ஆனா வீட்டுல இருக்க நம்ம அப்பா, அம்மாக்களுக்கு தான் இது புரிய மாட்டேங்குது. கேட்டா, "நாங்க என்ன உங்கள மாதிரி சினிமா கினிமானா சுத்தறோம். எங்களுக்கு இருக்குற ஒரே பொழுது போக்கு இதான"னு நம்மளையே மடக்கிடறாங்க. இவங்களோட சேர்ந்து வேற வழி இல்லாம இந்த கொடுமையை அனுபவிக்கிறவர்கள் இங்கு பல பேர் உண்டு. சினிமாவாவது இரண்டரை மணி நேரத்துல முடிஞ்சிடும் ஆனா இந்த மெகா சீரியல்ஸ் இரண்டரை வருஷம் ஆனாலும் முடிய மாட்டேங்குது.

முன்னாடி எல்லாம் கடைசி சீரியல் ஒன்பதரை மணிக்கு இருந்தது. இப்போ பதினோரு மணி வரைக்கும் போயிடுச்சு! இவ்வளோ இருந்தும் "இது எல்லாமே சூப்பர்"னு வோட்டு பண்ண அந்த தெய்வங்கள் யாருன்னு தெரியல. நீங்க எங்க இருந்தாலும் உங்களோட அந்த மன தைரியத்தை நான் பாராட்டுறேன்! அவ்வ்!

Saturday, June 21, 2008

அவார்ட்ஸ்

"Nice Matters Award is for those bloggers who are nice people; good blog friends and those who inspire good feelings and inspiration. Also for those who are a positive influence on our blogging world.”
இந்த அவார்டை எனக்கு கொடுத்த இல்லத்தரசிக்கு மிக்க நன்றி. இல்லத்தரசி ப்ளாக் ஆரமிக்க என்னுடைய ப்ளாக்கும் ஒரு தூண்டுதலாக இருந்ததாக இதை எடுத்து கொள்கிறேன்;) என்னை பொறுத்தவரை நீங்கள் போடும் ஒவ்வொரு கமெண்ட்டும் எனக்கு அவார்ட் மாதிரி தான். இந்த அவார்டை நான் என் சகோதரி தமிழினிக்கு தருகிறேன்.


மேலே உள்ள அவார்ட் கிடைத்த அதே நாள் எனக்கு கிடைத்த இன்னொரு அவார்ட் இந்த 'குட் சாட் ப்ளாக் அவார்ட்' . இதை எனக்கு கொடுத்தது, தமிழினி.
மிக்க நன்றி தமிழினி. வலைப்பூ மூலம் எனக்கு கிடைத்த முதல் நண்பி தாங்கள் தான்.(இப்போ சகோதரி;) தாங்கள் மேலும் பல அவார்ட் பெற எனது வாழ்த்துக்கள். இந்த அவார்டை நான், இந்திய சமையல் கலையை தன் வலைப்பூ மூலம் பரப்பும் இல்லத்தரசிக்கு அளிக்கிறேன்.

Thursday, June 19, 2008

செய்தித்தாளின் முதல் பக்கத்தில் நல்ல செய்தி வருவது சாத்தியமா?

ஆறாம் வகுப்பு படிக்கிற பையன் ஒருவன் அப்துல் கலாமை பார்த்து கேட்டான், "நம்ம ஊர் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் எப்பொழுதும் கெட்ட செய்திகளையே போடுகிறார்கள். நல்ல செய்திகள் எல்லாம் எங்காவது மூலையில் சிறியதாக போடுகிறார்கள். ஏன் இப்படி?" என்று.


அதற்கு அப்துல் கலாம், "கெட்ட செய்தி என்பது மிகவும் பரபரப்பானது. அதே பரபரப்பு நல்ல செய்திகளில் இருப்பதில்லை" என்று கூறினார். (Bad news is sensational, whereas good news does not bring about sensational.) ஆனால் இந்நிலைமை மாறி வருவதாக கலாம் தெரிவித்தார்.

எனக்கு என்னமோ இது மாறும் என்று தோணவில்லை. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். நானும் என் அலுவலக நண்பரும் வேலை முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தோம். அப்பொழுது அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஏதோ செய்தி ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு பேர் நின்று பார்த்து கொண்டிருந்தனர். ஏதோ விமானத்தை பற்றிய செய்தி அது. அதை கவனித்த என் நண்பர் அருகே சென்று என்ன செய்தி என்று கவனித்தார். கவனித்தவர், உடனே என்னிடம் திரும்பி வந்து, "ச்சே! ஏதோ புது விமானம் விட்டிருக்கிறார்களாம். நான் ஏதோ விபத்து என்று நினைத்தேன். வா போலாம்" என்று சொன்னார். அதற்கு நான், ஏன்யா! யாராச்சும் செத்தா தான் நின்னு பாப்பீங்களானு? கேட்டதுக்கு தன் சிரிப்பை மட்டுமே பதிலாக்கி விட்டு சென்றார்.

இப்படி இருக்குற நம்ம கிட்ட, நல்ல செய்திய முதல் பக்கத்துல போட்டா எப்படிங்க விற்க முடியும்? இது நம்ம நாட்டுல மட்டும் இல்லைங்க. எல்லா நாட்டுலையும் இதே தான் நடக்குது. அதே போல் இது இன்னைக்கு நேத்து ஆரமித்ததில்லை, அந்த காலத்துல இருந்தே நடந்துட்டு வர்றது தான். இங்கே நான் போட்டிருக்குற படத்துல உள்ள எடுத்துகாட்டு கொஞ்சம் அதிகம் தான், ஏன்னா அந்த சமயத்துல செய்தித்தாள் முழுவதுமே அதை பற்றி தான் இருந்திருக்கும்.

அந்த மாதிரி நாட்டுக்கு முக்கியமான செய்தின்னா கூட பரவா இல்லைங்க. இப்போ வர தலைப்பு செய்திகள் சில:

1. கணவனை தேன்நிலவுக்கு அழைத்து சென்று தன் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி.

2. சொந்த மனைவியையே வெட்டி கொன்ற கணவன்.

இப்படி எல்லாம் வருதுங்க. அதுவும் இரத்தம் படிந்த புகைப்படத்துடன். சொன்னா நம்ப மாட்டீங்க, மேல நான் சொல்லி இருக்குற எடுத்துகாட்டில் முதல் செய்தி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்த செய்தி வந்த சமயத்துல எங்க ஏரியாவில் செய்திதாள்களுக்கு தட்டுப்பாடு. வந்த கொஞ்ச நேரத்துலையே எல்லா கடையிலையும் செய்தித்தாள்கள் தீர்ந்துவிட்டது. இப்போ சொல்லுங்க முதல் பக்கத்தில் நல்ல செய்தி வருவது சாத்தியமா?

Monday, June 16, 2008

தசாவதாரத்தின் டாப் 10 அவதாரங்கள்


தசாவதாரத்தின் விமர்சனத்தை அனைவரும் எழுதிவிட்டதால், நானும் எதற்கு அதையே எழுதனும்னு நினைத்தேன். அதனால் தான், சரி படத்தில் வரும் எல்லா அவதாரங்களை பற்றியும் ஒரு விமர்சனம் போடுவோம்னு முடிவு செய்தேன். இதை பற்றியும் ஏற்கனவே போட்டுட்டாங்கனு சொல்றீங்களா? போட்டிருந்தா என்னங்க? வந்துட்டீங்கள்ள? மறுவாதையா படிச்சுட்டு போங்க. இல்லனா அழுதுடுவேன்!

படத்தில் கதை இல்லை என்று குறை கூறுபவர்கள் சற்று இதை படியுங்கள். பிரமிக்க வைக்கும் கமல் சாரின் நடிப்பை மட்டுமே எதிர் பார்த்து போங்க. ஒரு ஏமாற்றமும் இருக்காது.

ஒரு புதிய முயற்சியை செய்ய அவர் எடுத்துக்கொண்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. நோவாம நோம்பு கும்முடுற நடிகர்கள் இருக்குற இந்த காலத்துல, இந்த வயசுலயும் இவ்வளவு சிரம பட்டிருக்கார் என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. அவர் தமிழன் என்பதில் பெருமிதமாவும் இருக்கு! அவருக்காக இந்த படத்த கண்டிப்பா பார்க்கலாம். இதை சொல்லும் நான் ஒரு ரஜினி ரசிகன்.

சரி, இப்போ அந்த பத்து அவதாரகளையும் கொஞ்சம் அலசுவோம், எனக்கு பிடித்த வரிசையில்!

1. ரங்கராஜ நம்பி

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த அவதாரம் இது தான். கமல் இதே தோற்றத்தில் ஒரு முழு நீல சரித்திர படம் எடுத்தால் ரொம்ப நல்லா வரும். அந்த அளவுக்கு பொருந்தி இருப்பார். ரங்கராஜ நம்பியாய் அவர் தன் கண்களால் வெளிப்படுத்தும் கோவமும், இயலாமையும், அவரின் உடற் கட்டும், புத்திசாலித்தனமான வசனமும் டாப். கமலை முழு கமலாக கான முடிந்தது இந்த அவதாரத்தில் தான். சிறிது நேரமே வந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.

2. பல்ராம் நாயுடு

படம் முழுவதும் வரும் இன்னொரு பாத்திரம் இது. இதில் கமலை அடிச்சுக்க ஆளே இல்லை. இவர் ஒரு தமிழ் பேசும் தெலுங்கர். படத்தின் முதல் காமெடியன் இவர்தான். இருப்பினும் இவர் தன்னிடம் ஆங்கிலம் பேசும் கமலிடம், "தெலுங்கு ஆளான நானே தமிழ் கத்துகிட்டு பேசறேன். தமிழ் ஆளு நீ இங்கிலீஷ்ல பேசற. இப்படி இருந்தா எப்படியா தமிழ் வளரும்னு" கேக்கற இடத்தில் சில பேருக்கு கண்டிப்பா அறை விட்ட மாதிரி இருந்திருக்கும். எந்த தெலுங்கு பெயரை கேட்டாலும் சந்தோஷத்தில் இவர் முகம் மலர்ந்து 'தெலுங்கு வாடானு' கேப்பார் பாருங்க, சான்ஸ்ஸே இல்லை. இவரின் உதவியாளர், இவரை பற்றி பெருமையாக 'Sir can speak in five languages of Telugu' என்று சொல்லும் இடத்தில் சிரிப்பை அடக்க முடியாது. இது மாதிரி இன்னும் நிறைய.

3. வின்சென்ட் பூவராகன்

இந்த பாத்திரத்தில் கமலின் குரல் மட்டும் இல்லையென்றால் இவரை அடையாளமே கான முடியாது. படத்தில் இவர் போட்ட மற்ற அனைத்து வேஷங்களையும் விட இது தான் சற்று இயற்கையாக தெரிந்தது. இதில் இவர் பேசும் தோரணை சூப்பர். அசத்தி விட்டார். பாத்திர படைப்பும் அருமை. ஒருவர் இந்த கமலை பார்த்து, "நீ என்ன உலக நாயகனா" என்று கேட்க, அதற்கு கமல், 'ஆமாம். நான் மட்டும் இல்லை. இருநூறு லட்சம் விந்துக்களிடம் தான் ஒன்று மட்டும் போட்டி போட்டு ஜெயித்து மனிதனாக வெளியே வரும் ஒவ்வொருவரும் உலக நாயகன் தான்'(வசனம் சரியாக நினைவில்லை) என்று சொல்லும் இடத்தில் வசனகர்த்தா கமல் நிற்கிறார்.

4. கிருஷ்ணவேணி

இந்த பாத்திரம் நாம் அனைவரும் ஏற்கனவே அவ்வை ஷன்முகியில் பார்த்த ஒன்றாக இருந்தாலும், இதில் இவர் எடுத்து கொண்ட சிரத்தை அபாரம். இதில் பாட்டியாக நடித்தது மட்டும் இல்லாமல், உயரம் கம்மியாகவும் இருப்பார். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 'முகுந்தா முகுந்தா' பாட்டில் கமலே இந்த பாட்டி பாடுவது போல் பாடியிருப்பரே, அது அவரால் எப்படி தான் முடிந்ததோ. இந்த பாட்டி தான் பிராமினராக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனை தன் மகனாக நினைத்து கட்டி அழுவும் போது, அவரை தடுப்பவரை பார்த்து, "போடா ஜாதி பிசாசே' என்று திட்டும் போது நெஞ்சில் நிற்கிறார்.

5. கிறிஸ்டியன் ஃபிலெட்சர்

இவரும் படம் முழுவதும் வருவார். ஆரம்பத்தில் இவரது வேஷம் சற்று செயற்கையாக தெரிந்தாலும், போக போக அதில் கமல் தெரிய மாட்டார். யாரோ ஒரு நிஜமான ஹாலிவுட் வில்லன் போல தான் தோன்றும். அந்த அளவுக்கு அருமையாக பண்ணி இருப்பார் கமல். அவரது ஆங்கில ஸ்லாங் ரொம்ப நல்லா இருக்கும்.

6. ஜார்ஜ் புஷ்

இந்த படத்தின் இரண்டாவது காமெடியன் இவர்தாங்க. சான்ஸ்ஸே இல்லை. இவரது காட்சிகள் அனைத்தும் சிரிப்பை வரவழைக்கும். இதை எப்படி தைரியமாக புஷுக்கே போட்டு காமிக்க முயற்சி பண்ணுகிறார்களோ தெரியல. ரொம்ப தைரியம் தான். உதாரணத்துக்கு ஒன்றை சொல்லுகிறேன். புஷ் தன் உதவியாளரை பார்த்து ஒரு விளக்கத்தை கேப்பார். அதற்கு அவர், "It's so complicated. Let me explain" என்று கூறுவர். உடனே புஷ், "If it's so complicated, then no need to explain" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்சன் கொடுப்பார். இன்னொரு இடத்தில், அந்த பயோகெமிக்கல் கிருமியை அழிக்க அவர் தன் உதவியாளரிடம், "Can we do something about this with Nuclear weapons?" என்று கேட்கும் இடத்தில் ங்கொக்கா, மக்கா அடக்க முடியல. சிரிப்பை தாங்க. கமலுக்கு எவ்வளோ குசும்பு பாருங்க.

7. கோவிந்தராஜன் ராமசுவாமி

இவர் தான் ஒரு விஞ்ஞானி. படம் பூராவும் இவர்தான் ஓடிக்கொண்டே இருப்பார். இந்த பாத்திரம் நமக்கு மிகவும் பரிட்சயமானது. அதனால் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இவர், "கடவுள் இல்லைன்னு எங்கே சொன்னேன், இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்" என்று சொல்லும் வசனம் இன்னும் மனதில் நிற்கிறது.

8. ஷிங்கென் நரஹசி

இந்த கமல் ஒரு ஜப்பானிய கராத்தே மாஸ்டர் பாத்திரம். இதில் இவர் முக அமைப்பே வேறு மாதிரியாக இருக்கும். கண்களும் சற்று வித்யாசமாக தெரியும். ஆனால் கூடவே அந்த செயற்கை தனமும் தெரியும். இதையும் மிக சிறப்பாக செய்திருக்கிறார் கமல். கடைசியில் போடும் சண்டை காட்சி அற்புதம். அப்போது இவரை பார்த்து ஃபிலெட்சர் கமல் "Remember Hiroshima" என்று சொல்ல, பதிலுக்கு இவர் "Remember Pearl Harbour" என்று சொல்வது அபாரம்.

9. அவதார் சிங்

இந்த கமல் ஒரு தமிழ் தெரிந்த பாட்டு பாடும் சிங். இதில் இவரது வேஷம் ரொம்பவே செயற்கையாக தெரிந்தது எனக்கு. இதில் இவரது நடிப்பும் சற்று பரிட்சயமாகவே இருந்தது. அதனால் இந்த பாத்திரம் என்னை அவ்வளவாக கவரவில்லை.

10. கலிஃபுல்லா முக்தார்

இது ஒரு ஏழு அடி உள்ள உயரமான முஸ்லீம் இளைஞன் பாத்திரம். இந்த வேஷமும் ரொம்பவே செயற்கையாக தெரிந்தது. ஆனால் கமலின் நடிப்பால் அதை கொஞ்சம் மறைத்து விட்டார். இதில் இவர் பேசும் தோரணையும் ரொம்ப நல்லா இருக்கும்.

சரி இப்போ படத்தின் நிறைகளையும், குறைகளையும் பார்ப்போம்.


நிறைகள்:

1. கமலின் அபார நடிப்பும், புதுமையான முயற்சியும். கண்ணை மூடிக்கொண்டு வெறும் வசனத்தை கேட்டாலே எது எந்த கமல் என்று சுலபமாக சொல்லிவிட முடியும்.

2. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட காட்சி.

3. படத்தின் வசனமும், அருமையான பின்னணி இசையும்.

4. அருமையான ஒளிப்பதிவு.


குறைகள்:

1. பாடல்கள். முதல் பாடல் 'கல்லை மட்டும்' நல்லா இருக்குன்னு பார்த்தால் அது காப்பி அடித்த பாடலாம். அந்த பாடலை பார்க்கும் பொழுது நான் பின்னணியில் தான் வருகிறது என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் அதை கமல் பாடுகிறார். அவருக்கு அந்த குரல் சற்றும் பொருந்தவில்லை. என்னை மிகவும் கவர்ந்த பாடல் 'முகுந்தா' பாடல் தான். இதற்கு ரேஷ்மையா தான் இசையமைத்தாரா என்று நம்ப முடியவில்லை.

2. அஸின் பாத்திரம் கொஞ்சம் எரிச்சலை மூட்டுகிறது. உயிரும், மானமும் போகும் நேரத்திலும் சும்மா பெருமாள், பெருமாள் என்று சுற்றி கொண்டிருப்பது கொஞ்சம் ஓவர்.

3. வன்முறை காட்சிகள். கொலைகளும், இரத்தமும் நிறைய இருக்கிறது படத்தில்.

4. புரிந்து கொள்ள சற்று கடினமான திரைக்கதை. கமலிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் அவர் தன் லெவெலுக்கே யோசித்து படத்தை எடுத்து விடுவார். சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி எடுக்க மாட்டார். உதாரணத்திற்கு "Jurassic Park" படத்தை எடுத்து கொண்டால் அதில் Dinosaursசை எப்படி ஒரு கொசுவில் இருந்து உருவாக்கினார்கள் என்பதை தெளிவாக காண்பித்திருப்பார்கள். அதே போல் கமலும் இந்த "Chaos", "Butterfly effect", இதை எல்லாம் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்.

5. படத்தில் இன்னொரு நெருடலான விஷயம் கடைசியில் சுனாமி வந்துட்டு போனதுக்கப்புறம் ஊரே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு, அலறிக்கொண்டு இருக்கும் போது, கமலும் அசினும் நின்று ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருப்பது. இதை தவிர்த்திருக்கலாம்.

Sunday, June 15, 2008

அன்றாட வேலையினூடே ஒரு நாள் - ஜூன் 2008 PIT புகைப்படப் போட்டி

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.



மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Tuesday, June 10, 2008

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், இந்தியா என்பது பாலிவுட்டை குறிக்கும்

IIFA என்பது சர்வதேச இந்திய திரைப்பட விழா(International Indian Film Academy) ஆகும். 2008க்கான இந்த விழா தற்போது பாங்காக்கில் நடை பெற்று கொண்டிருக்கிறது. சென்ற வருடம் துபாயில் நடைபெற்றது. சர்வதேச விழா என்பதால் வெளிநாடுகளில் நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் இதில் மிகவும் நெருடலாக இருப்பது அந்த 'இந்தியா' என்பது தான். ஏன் இப்படி சொல்கிறேன் என்று புரியவில்லையா? கீழே உள்ள பட்டியலை பாருங்கள்:


Best Picture: Guru, Chak De India, Jab We Met, Om Shanti Om, Life In A Metro
Best Actor: Abishek Bachchan - Guru, Akshay Kumar - Bhool Bhulaiyaa, Salman Khan - Partner, Shah Rukh Khan - Chak De India, Shahid Kapoor - Jab We Met
Best Actress: Aishwarya Rai - Guru, Deepika Padukone - Om Shanti Om, Kareena Kapoor - Jab We Met, Tabu - Cheeni Kum, Vidya Balan - Bhool Bhulaiyaa

முழு பட்டியலையும் கான இங்கே கிளிக்கவும்.

பட்டியலை பார்த்ததும் உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரிஞ்சி இருக்கனுமே? இதில் இருப்பது எல்லாம் வெறும் பாலிவுட் படங்கள் மட்டும் தான். இந்தியால இவங்க மட்டும் தான் படம் எடுக்கராங்களா? இவங்க எடுக்குற பத்து படத்துல எட்டு படம் ஏதாவது ஒரு ஆங்கில படத்த பார்த்து காப்பி அடிச்சதா இருக்கும். அது மட்டும் இல்லாம அந்த பத்துல ஒன்னு மட்டும் தான் ஹிட் ஆகும். இவங்க எப்படி இதை 'சர்வதேச இந்திய திரைப்பட விழா' என்று சொல்லலாம்? இதில் இருப்பது வெறும் பாலிவுட் படங்கள் தானே?

இப்போ இங்கயும் கொஞ்ச போயி பாருங்க. ஒசியன் சினிபேன் பெஸ்டிவல் ஆப் ஆசியான் அண்ட் அராப் சினிமா(Osian Cinefan, Festival of Asian & Arab Cinema), இந்திய படங்களின் பிரிவில் பருத்திவீரனை சிறந்த படமாகவும், அதில் நடித்த ப்ரியாமணியை சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் பெர்லின் திரைப்பட விழாவில் கூட பருத்தி வீரனுக்கு சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு கொடுத்திருக்கிறார்கள். இவங்களுக்கு தெரிவது நம்மூர் காரர்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது? தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய எந்த மொழி படத்தையும் இவர்கள் மதிப்பதில்லை. இவர்கள் இப்படி செய்வதால் சர்வதேச அரங்கில் இந்திய படங்கள் என்றாலே பாலிவுட் படங்கள் தான் என்றாகி விட்டது.

போன முறை துபாயில் இந்த விழா நடந்த பொழுது கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இதை எதிர்த்து அந்த விழாவிலேயே குறை கூறி பேசினார். அந்த தைரியம் வேறு யாருக்கும் வராது. அதற்காக அவரை பாராட்டுகிறேன். இதனால் தான் என்னவோ இம்முறை தென்னிந்தியாவில் இருந்து யாரையும் கூப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அந்த விழாவில் மம்மூட்டி பேசியது இது தான்: "Indian cinema is not just Bollywood, and Hindi is not the only language. Why should our films be called South Indian cinema instead of being under the banner of Indian films?"

இவ்வளோ சொல்லியும் இவங்க இன்னும் திருந்தல. இதுல இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? தாரே ஜமீன் பர்(Taare Zameen Par) என்ற அருமையான படம் ஆமிர் கான் இயக்கத்தில் வெளி வந்ததே ஞாபகம் இருக்கா? அந்த படமும் இந்த பட்டியலில் இல்லை. ஷாருக்கான் படத்துக்கு(Chak De India) மட்டும் ஒன்பது விருதுகள். இதுலயுமா அரசியல்? ஒரு வேலை இந்த படம் டிசம்பர் மாதம் வெளி வந்ததால் அடுத்த வருடத்திற்கு எடுத்து கொள்வார்களோ? சரி, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. ஆனா தயவு செய்து மம்மூட்டி சார் சொன்னது போல் 'சர்வதேச இந்திய திரைப்பட விழா' என்பதை 'சர்வதேச இந்திய பாலிவுட் திரைப்பட விழா' என்று மாற்றி கொள்ளுங்கள்.

Monday, June 9, 2008

குங்ஃபூ பாண்டா - கண்டிப்பா பாருங்க!


சென்ற சனிக்கிழமை ஏதாவது ஒரு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணோம். என்ன படம் போறதுன்னு ஒரே குழப்பம். கடந்த இரண்டு மாதமாய் வந்த எந்த படங்களும் திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு என்னை தூண்டவில்லை.

கடைசியாக தங்கமணிக்கு அனிமேஷன் படங்கள் பிடிக்கும் என்பதால் இந்த 'குங்ஃபூ பாண்டா' படத்துக்கு டிக்கெட் புக் செய்தேன். இப்படத்தின் விளம்பரங்கள் பல நாட்களாக சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் ஒளிபரப்ப பட்டு வருகின்றன. அதை பார்த்த பொழுது கூட எனக்கு இப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோனியதில்லை. காரணம் படத்தின் தலைப்பு. இது ஏதோ சீனா குங்ஃபூ சம்பந்த பட்ட சண்டை படம் என்று நினைத்தேன்.

படம் பார்க்க சென்று அமர்ந்து விட்டோம். படம் ஆரம்பித்தது. முதல் காட்சியே சில கார்டூன் கதாபாத்திரங்கள் வந்து கன்னா பின்னாவென்று சண்டை போட்டுக்கொண்டது. எனக்கோ சரியான கடுப்பு. ஆஹா இதை பார்க்கவா வந்தோம்? இது அனிமேஷன் படம் இல்லையா? கார்ட்டூன் படமா? அப்பாடா! அது வெறும் கனவு காட்சி. இப்படத்தின் நாயகன் பொ'வின் (பாண்டா கரடி) கனவு அது. பொ'வை(Po) பார்த்தவுடன் எனக்கு அதை மிகவும் பிடித்துவிட்டது.

சரி இப்போ கதையை பார்ப்போம். பொவின் அப்பா ஒரு நூடுல்ஸ் கடை வைத்து நடத்துவார். அவருக்கு பொவிற்கும் தனது நூடுல்ஸ் செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுத்து அந்த கடையை பொவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் பொவிற்கோ குங்ஃபூ மீது அலாதி பிரியம். இருப்பினும் பொ சற்று சோம்பேறி. சாப்பாடு என்றால் பொவிற்கு கொள்ளை பிரியம்.

இது இப்படி இருக்கையில் பொ இருக்கும் ஊரின் குங்ஃபூ மாஸ்டர் ஊக்வே(Oogway), டாய் லுங்(Tai Lung) என்னும் தீய சிறுத்தையை எதிர்த்து சண்டையிட ஒரு டிராகன் வாரியரை (Dragon Warrior) தேர்ந்தெடுக்கப்போவதாக அறிவிக்கிறார். இதை பார்க்க செல்லும் பொவை மாஸ்டர் ஊக்வே தற்செயலாக டிராகன் வரியராக தேர்ந்தெடுக்கிறார். இது மாஸ்டர் ஷிபுவிற்கும்(Shifu) அவரின் ஐந்து சீடர்களுக்கும் பிடிக்கவில்லை. மாஸ்டர் ஊக்வேவிற்கு பிறகு அப்பதவியை ஏற்க போவது மாஸ்டர் ஷிபு தான். டாய் லுங்கை சிறுவயதில் எடுத்து வளர்த்து குங்ஃபூ கற்று கொடுத்ததும் மாஸ்டர் ஷிபு தான். ஆனால் மாஸ்டர் ஊக்வே டாய் லுங்கின் மனதில் தீய எண்ணங்கள் இருப்பதால் அதை டிராகன் வாரியராக தேர்ந்தெடுக்க மறுத்து விடுகிறார். மேலும் அதை சிறையும் வைத்து விடுகின்றனர்.

அதன் பிறகு தான் மாஸ்டர் ஷிபு இந்த ஐந்து சீடர்களையும் தேர்ந்தெடுத்து குங்ஃபூ கற்று கொடுக்கிறார். தற்போது அவர்களுக்கும் அந்த டிராகன் வாரியர் பதவி கிடைக்கவில்லை. அதான் இந்த கோவம். இதன் பிறகு பொ எப்படி ஷிபு மாஸ்டரின் நம்பிக்கையையும், ஐந்து சீடர்களின் நட்பையும் பெற்று, குங்ஃபூ கற்று கொண்டு டாய் லுங்கை வெல்கிறது என்பது தான் கதை. அந்த ஐந்து சீடர்களில் ஒன்றான குரங்குக்கு குரல் கொடுத்திருப்பது ஜாக்கி சான்(Jackie Chan), இன்னொரு சீடரான புலிக்கு குரல் கொடுத்திருப்பது ஏஞ்சலினா ஜோலி(Angelina Jolie). விரியன் பாம்பிற்கு குரல் கொடுத்திருப்பது லூஸி லியு(Lucy Liu).

இதில் பொ அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. அது அடிக்கும் ஒவ்வொரு லூட்டியும் உங்கள் வயிற்றை பதம் பார்ப்பது நிச்சயம். பண்டைய சீனாவை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். வசனங்கள் அனைத்தும் மிக நகைச்சுவையாக எழுதப்பட்டு படம் முழுவதையும் ஒரு நகைச்சுவை படமாக எடுத்து இருக்கிறார்கள். இந்த மாதிரி முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை கலந்த அனிமேஷன் படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.

ஸ்ரேக்(Shrek) படம் போல இதன் தொடர்ச்சி படங்களும் வரும் என்று எதிர்பார்கிறேன். இவ்வருடத்தின் மிக பெரிய ஹிட் படங்களின் வரிசையில் இதுவும் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம். ஆகமொத்தத்தில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய படம் இது. இப்படத்தின் வலைப்பூவை காண இங்கே சொடுக்கவும்.

பப்பு கான்ட் டான்ஸ் பட் டி.ஆர் கேன்

ஏ.ஆர். ரஹ்மானுடைய சமீபத்திய பாட்டு கேட்டீங்களா? ஒரு ஹிந்தி படத்துக்கு போட்டிருக்கார். பாட்டெல்லாம் சும்மா டக்கரா இருக்கு. அதுல ஒரு பாட்டு தான் 'பப்பு கான்ட் டான்ஸ் சாலா' என்கிற பாட்டு. சரியான பார்ட்டி(Party) சாங் இது. பாட்டுகளை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

அமீர் கான் தயாரிச்ச படம் இது. ஜெனிலியா தான் ஹீரோயின். ஹீரோ இம்ரான் கான் அமீர்கானுடைய சொந்தம். படத்தின் பெயரை சொல்லவே இல்லையே. படத்தின் பெயர் 'ஜானே து யா ஜானே நா'(Jaane Tu Ya Jaane Na), அப்படீனா 'உனக்கு தெரியுமோ தெரியாதோ'.

படம் எப்படி இருக்கும்னுலாம் தெரியல. இதுல வர அந்த 'பப்பு கான்ட் டான்ஸ்' பாட்டுக்கு நம்ம டி.ஆர் டான்ஸ் ஆடுனா எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன். அதை அப்படியே எடிட்டும் பண்ணிட்டேன். சும்மா சொல்ல கூடாது, இந்த வயசுலயும் மனுஷன் என்னமா டான்ஸ் ஆடறார். அதான் குட்டி முப்பத்திரெண்டு அடி பாயுது போல. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.


Thursday, June 5, 2008

டி.ஆரும் என் சண்டையும்

கடந்த ஞாயிற்று கிழமை காலையில் இருந்து கால்பந்து போட்டி(ஜெயித்தும் விட்டோம்), பார்ட்டி என பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து ஒரு நாலு மணிக்கு வீடு திரும்பினோம். சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு நானும் தங்கமணியும் பேசத் தொடங்கினோம். இந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே சண்டையில் வந்து முடிந்தது.

அதன் பின் இருவரும் எதுவும் பேசாமல் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல வேளையாக டிவி ரிமோட் என்னிடம் இருந்தது. இந்த மாதிரி ஏற்கனவே சண்டையில் இருக்கும் போது நாங்கள் இருவரும் ரிமோட்டுக்காக சண்டை போடுவதில்லை. நானும் சன் டிவி, விஜய் டிவி என மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தேன், நிகழவிருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை பற்றி சற்றும் அறியாதவனாய். அப்போ தாங்க அந்த சம்பவம் நடந்தது. சன் டிவியில் ஏதோ படம் ஆரம்பித்தது. சரி, இதையாவது பார்ப்போமே என்று ஆவலாக ஒலியை ஏற்றி வைத்தால், அது நம்ம டிஆரின் 'வீராசாமி'யாம். எனக்கு தூக்கி வாரி போட்டது. தமிழ்மணத்தில் ஒருவர் விட்டிருந்த எச்சரிக்கை எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது.

சரி மாற்றி விடலாம்னு நினைத்த போது எனக்கு திபீர்னு ஒரு வில்லத்தனமான யோசனை தோன்றியது. அப்பாவியான என்னிடம் சண்டை போட்ட தங்கமணியை பழி வாங்க இது தான் சரியான சந்தர்ப்பம். உடனே இன்னும் சற்று ஒலியை ஏற்றி வைத்து அதே படத்தை வைத்தேன். இந்த படத்தை பற்றி தெரியாத தங்கமணியும் ஏதோ புதிய படம் என்று ஆவலாக பார்த்துக்கொண்டிருக்க, அப்போது தான் டி.ஆரின் அறிமுகக் காட்சி. ஓர கண்ணால் தங்கமணியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை கவனித்தேன். "முழுசா சந்திரமுகியாக மாறி இருக்கும் உன் மனைவி கங்காவை பார்" என்று தலைவர் சொன்ன வசனம் நினைவில் வந்து கொஞ்சம் பயமுறுத்தியது.

இதுதாங்க அந்த அறிமுக பாடல்:



மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி ஒரு நிலைமையில் இருந்த தங்கமணிக்கு மேலும் சில அதிர்ச்சிகள். என்னன்னு கேக்கறீங்களா? அதையும் நீங்களே பாருங்கள்:

இந்த பாட்டுல என்னமா டான்ஸ் ஆடி இருக்கார் பாருங்க. விரைவில் இவர் ஜோடி நம்பர் 1னில் நடுவரா கூட வரலாம். எதுக்கும் தயாராகிக்கோங்க.



இந்த பாட்டுல அவருடைய ஸ்டைலும், அழகும் வெளிப்படும். பில்லா படத்த அஜித்துக்கு பதில் இவர் பண்ணி இருந்தா, இன்னும் டக்கரா இருந்திருக்கும் இல்ல? அதை நெனச்சாலே எனக்கு வார்த்தை வரமாட்டேங்குது.



படையப்பா படத்துல ரஜினி, ரம்யா கிருஷ்ணன் முன்னாடி ஊஞ்சல இழுத்து போட்டு ஒக்காருவாறே, அந்த காட்சி ஞாபகம் இருக்கா? இப்போ இந்த காட்சிய பாருங்க, அதை விட எவ்வளவு பிரமாதமா செஞ்சி இருக்கார் பாருங்க டி.ஆர்.


இதுல டி.ஆரின் தங்கச்சியை காதலிக்கும் இன்னொரு ஹீரோ படம் பூராவும் காதில் ஒரு சாம்பிராணி பத்தியை சொருகி கொண்டிருப்பார். படம் முடியறதுக்குள்ள அதை யாராவது கொளுத்துவாங்கனு எதிர்பார்த்தேன். கடைசி வரை யாரும் அதை கொளுத்தவே இல்லை:( எங்க இருந்து தான் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் பிடிப்பாரோ?

படத்துல உண்மையிலேயே ரொம்ப கஷ்ட பட்டு நடிச்சது மும்தாஜா தான் இருக்கும் போல. பின்ன இவர லவ் பண்ற மாதிரி இல்ல நடிக்கணும். அவங்க பேசுன ஒரு வசனம் இன்னும் என் நெஞ்சில அப்படியே நிக்குது:

"நீ என் மனச தான்யா திருடுன, ஆனா நான் நீ குளிச்சிட்டு வச்ச சோப்ப திருடி அத தேச்சி தான்யா குளிக்கிறேன்."

இதை நெனச்சி பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கே, அவங்களுக்கு எப்படி இருந்துதோ?

இப்போ நம்ம கதைக்கு வருவோம். இந்த மாதிரி தங்கமணியோட சண்டைல இருக்கும் போது, எப்பவுமே கஷ்டப்பட்டு முகத்த இறுக்கமாகவே வச்சுக்கிட்டு இருக்கணும். இல்லைனா நான் சண்டைல தோத்தது போல ஆகிவிடும். இதுக்காகவே எவ்வளவோ கஷ்டப்பட்டு என் சிரிப்பை எல்லாம் அடக்கி கொண்டு இந்த படத்தை பார்த்துகிட்டிருந்தேன். ஆனால் இந்த காட்சிகளை பார்த்துவிட்டு என்னால் தாங்க முடியாமல் சிரித்து விட்டேன். உங்களால சிரிக்காம இருக்க முடியுதானு முயற்சி பண்ணி பாருங்க.

நல்ல வேளை, பாஸ்கர் இவர பிடிச்சிருக்காரு, இல்லனா....யய்யாடி!


இந்த படத்தோட சேர்த்து இவர் மொத்தம் நாற்பதொன்பது தங்கச்சிகளை மார்மேலையும், தோள்மேலையும் போட்டு வளர்த்திருக்கார். அடுத்த படத்தோட அரை சதம் அடித்து விடுவார்.



இதை பார்த்து விட்டு தங்கமணியின் கைகள் தலைவலி தைலத்தை நோக்கி எட்டியது. நான் சிரித்ததை பார்த்த தங்கமணி, ஜெயித்து விட்ட தோரணையோடு என்னை பார்த்து "மரியாதையா சேனலை மாத்துரியானு" அன்பு கட்டளை இட்டார். நானும் படம் முடியபோவுது, கிளைமாக்ஸ் பார்த்துட்டு மாத்திடறேனு சொல்லிட்டு அந்த கொடுமையையும் பார்த்தேன். இதுக்கு மேலயும் தாங்க முடியாதுன்னு தங்கமணி எழுந்து சமயகட்டுக்குள்ள காபி போட போயிட்டாங்க. அப்பாடா எப்படியோ சண்டை தீர்ந்தது, ஆனா ஒரு சண்டே இப்படி வீணாகி போச்சே!

நீங்க எங்க போறீங்க. இருங்க, தயவு செய்து இதையு பார்த்துட்டு போங்க. இவ்வளோ கொடுமையையும் பார்த்த நீங்க, இத பார்க்க மாட்டீங்களா? படத்துல ஒருவிதத்துல ரொம்ப ஆருதாலான காட்சியே இதுதாங்க. ஏன்னா அவரு அபீட் ஆயிடுவாரு. எவ்வளவு வித்தியாசமா எடுத்திருக்கார்னு பாருங்க. இதுவரை தமிழ் சினிமாவில் இது மாதிரி துணிச்சலான கிளைமாக்ஸ் யாரும் வச்சு இருக்க மாட்டாங்க. வழக்கமா படத்துல கணவர் இறந்ததும், மனைவி அப்படியே கணவர் மேல விழுந்து உசுர விட்டுடுவாங்க. ஆனா இந்த படத்துல டி.ஆர் இறந்ததும், அவருடைய எதிர் வீட்டு காரரோட பொண்டாட்டி, அதாங்க மும்தாஜ் உசுர விடறாங்க. ச்சே, 'அந்த ஏழு நாட்கள்' படத்தோட கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு கிளைமாக்ஸ்ஸா?




விகி(wiki)லையும் போயி இவர கலாய்ச்சது யாருன்னு தெரியலைங்க. விகிய படிச்சுட்டு என்னால நம்பவே முடியல. நீங்களே பாருங்களேன்.

Tuesday, June 3, 2008

அவங்களும் திருந்த மாட்டாங்க, இவங்களும் திருந்த மாட்டாங்க

"ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சனையில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை"னு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக அறிவிச்சிருக்காராம். இன்னும் விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துல இவங்க விட்டு கொடுக்க என்ன இருக்கு? அதை இவ்வளோ நாள் தள்ளி வச்சு நாம தான் விட்டு கொடுத்து இருக்கோம். இதை கேக்கவா கருணாநிதி இவ்வளோ நாள் இந்த திட்டத்தை தள்ளி வச்சார்? இந்த பிரச்சனையும் தீராது போல!

இதை படித்து கொண்டிருக்கும் போதே, இந்த செய்தியும் படித்தேன்:

பெங்களூரில் தமிழ் படக் குழு மீது கன்னட அமைப்பு தாக்குதல்

இதை படித்த நீங்கள், இதையும் படியுங்கள்:

"பெங்களூரில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா, பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம், சகோதரர்களாக இருப்போம் என கெளடா அறிவித்துள்ளார்."

இது தானா சார் உங்க டக்கு ஸாரி வாக்கு? நம்ம ஆளுங்களையும் சொல்லணும். இவங்களுக்கு படப்பிடிப்பு நடத்த வேற இடமே கிடைக்கலியா? நம்ம ஊருல இல்லாத அப்படி என்னத்த கண்டாங்க அங்க? எப்படியும் எடுக்க போறது மொக்க படம் தான். மதியாதார் வாசலையே மிதியாதேனு சொல்லுவாங்க. இவங்க என்னடானா, போட்டு மிதிப்போர் வாசலையே திரும்ப திரும்ப மிதிக்கறாங்க. திருந்துங்கடா. இல்ல சத்யராஜ் அண்ணாச்சி கிட்ட போட்டு கொடுத்துடுவேன்.