Wednesday, April 23, 2008

இரண்டக்க இரண்டக்க...

வவாசங்க இரண்டாவது ஆண்டு விழா போட்டியில கலந்துக்க இரண்டு வாரமா 'இரண்டு மனம் வேண்டும்'னு பாடிகிட்டே யோசிச்சு யோசிச்சு ரொம்ப கொழம்பி போயிட்டேன். கொறஞ்சது இரண்டு பதிவாவது போடனும்னு பார்த்தேன். இதுக்கு மேல யோசிச்சா தலையில இரண்டு முடிதான் இருக்கும். சரி இப்போ இரண்டு நிமிஷம் என் மொக்கைய படிங்க.

சரியா இரண்டு மணிக்கு ரங்கா தன் 2G ரெயின்போ காலனி வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்க மகளிர் கல்லூரியை நோக்கி கிளம்பினான். இரண்டு முப்பதுக்கு மகளிர் கல்லூரி விடும் நேரம். அதனால் கல்லூரி விடும் நேரத்தில் அங்கு போய் நின்று இரண்டு சூப்பர் பிகரையாவது பார்த்து லுக் விட வில்லை என்றால் அவனுக்கு இரவு இரண்டு மணியானாலும் தூக்கம் வராது. இரண்டும் கெட்டாம் வயசு பாருங்க. இவனுக்கு கல்லூரி விடுமுறை விட்டு இரண்டு வாரம் ஆவதால், இந்த இரண்டு வாரமாக இதே வேலை தான் இவனுக்கு.

இரண்டு பத்துக்கு அந்த கல்லூரியின் முன் ஆஜராகி விட்டான் ரங்கா. இன்னும் சரியாக இரண்டு பத்து நிமிடம் (அதாங்க இருபது நிமிடம்;) அவன் காத்திருக்க வேண்டும். அதுவரை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு கடலை உருண்டையை வாங்கி மென்று கொண்டிருந்தான். கடலை உருண்டை என்றால் அவனுக்கு இரண்டு வயசுல (அட்ரா அட்ரா;) இருந்தே பிடிக்கும்.

சரியாக மணி இரண்டு முப்பது. கல்லூரியில் இரண்டு தடவை மணி அடித்த ஓசை நன்றாக கேட்டது. ரங்கா பக்கத்தில் இருந்த ஒரு இரண்டு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன் தலை முடியை சரி செய்து கொண்டு ஆவலாக கல்லூரி வாசலையே வழி மேல் தன் இரண்டு விழிகளையும் வைத்து காத்து கொண்டிருந்தான்.

இரண்டு, மூன்று, நான்கு என்று கும்பல் கும்பலாக மாணவிகள் வெளியில் வர தொடங்கினார். வழக்கம் போல ரங்காவை ஒருவரும் கண்டு கொள்ளவே இல்லை. ரங்காவும் சற்றும் சளைக்காமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவதென நின்று கொண்டிருந்தான்.

பெரும்பாலான மாணவிகள் சென்று விட்டனர். சிறு சிறு இடைவெளி விட்டு ஒன்று, இரண்டு பேராக வந்துக்கொண்டிருந்தனர். ரங்கன் இன்னும் மனம் தளரவில்லை. அப்போது கல்லூரி வாயிலில் இருந்து சற்று தொலைவில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு இரண்டு அழகான மாணவிகள் வந்து கொண்டிருப்பதை ரங்கன் கவனித்தான். அவர்களையே சற்று உத்து நோக்கலானான். வாயில் அருகே வந்ததும் அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு ரங்கனை பார்த்தனர்.

ரங்கனுக்கு இரண்டு கையும் ஓடலை, இரண்டு காலும் ஓடலை. அவ்வளவு சந்தோஷம் அவன் மனதுக்குள். அந்த சந்தோஷத்தை அவன் எவ்வளவு கட்டு படுத்த முயன்றும் முடியாமல் அவனது முகம் காட்டிக்கொடுத்தது. அவன் சிரிப்பதை பார்த்த அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டு சிரித்தனர். அப்படியே பேசிக்கொண்டே ரங்கனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ரங்கனுக்கு தலை கால் புரியலை. என்ன செய்வது, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். மனது படக் படக் என்று நொடிக்கு இரண்டு முறை அடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு.

அந்த இரண்டு மாணவிகளும் அவனை மிகவும் நெருங்கி விட்டனர். ரங்கன் ஒரு முடிவு எடுத்தவனை போல் அவர்களிடம் ஏதோ இரண்டு வார்த்தை பேச முயன்றான். அப்போது திடீல் என்று அவன் முதுகில் யாரோ படார் என்று அடித்தனர். காரியம் கை கூடி வரும் வேளையில் சட்டி உடைந்தது போல் ஆகிவிட்டதால் வந்த கோபத்தோடு, 'த்த்த...எவண்டா அது' என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்தான் ரங்கன். தனது நெருங்கிய நண்பர்கள் இருவரில் யாரோ ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ரங்கனுக்கு ஒரே அதிர்ச்சி.

பின்னால் நின்று கொண்டிருந்தது அவனது அப்பா. 'இரண்டு வாரமா அம்மா சொல்ற வேலை ஒன்னையும் செய்யாம துரை இதை தான் செஞ்சிகிட்டிருக்கீங்களா?' என்று திட்டிக்கொண்டே தலையில் இரண்டு போட்டு ரங்கனை வீட்டுக்கு இழுத்துச் சென்றார்.

இந்த கதையில் 'இரண்டு' அல்லது இரண்டு என்று பொருள் தரும் வார்த்தையை எத்தனை முறை உபயோகித்துள்ளேன் என்று சரியாக சொல்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இரண்டே ரெண்டு தான், 'இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொருமைங்க; நீங்க ரொம்ப நல்லவங்க;)'

இது
வவாசங்க போட்டிக்காக எழுதிய கதை அல்ல நிஜம், ஆனால் ரங்கன் நானல்ல...நம்புங்க, நெசமாத்தான் சொல்றேன்!;)

5 comments:

Radha Sriram said...

39 தடவை.:) நல்லா வந்திருக்கு.

Radha Sriram said...

39 தடவை.:) நல்லா வந்திருக்கு.

Sathiya said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதா! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, உங்களுக்கு ரொம்ப பொருமைங்க, நீங்க ரொம்ப நல்லவங்க;) ஆனால் இரண்டு மொத்தம் 40 தடவை வரும். 2G ரெயின்போ காலனியில் ஒரு இரண்டு இருக்கிறதே;)

jangiri said...

naanum RENDAVADHU thadavaiya varen hi hi..

Sathiya said...

உங்களுக்கு ரெண்டு தடவை நன்றி சொல்லிக்கிறேன் திரு ஜாங்கிரி அவர்களே;)