Tuesday, April 1, 2008

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம்

நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம். என்னங்க? ஆச்சரியமா இருக்கா? நீங்க படிக்கறத உங்களாலேயே நம்ப முடியல இல்ல? அப்புறம் எதுக்கு நம்பறீங்க? இந்தியால இருக்குற சுயநல அரசியல்வாதீங்க இருக்கிற வரைக்கும் இது நடக்குற காரியம் இல்ல. இது மாதிரி ஏப்ரல் மாதம் முதல் தேதில, முட்டாள்கள் தினத்துல இந்த மாதிரி செய்திய போட்டு பார்த்துக்க வேண்டியது தான். இல்லனா இந்த பிரச்சனைக்கு தீர்வை என் காலத்துல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

நமக்கு உரிய பங்கு நீரை நாம் திறந்து விட கேட்பதும் அதற்கு அவிங்க மறுப்பதும், மாத்தி மாத்தி வழக்கு போடுறதும், தீர்ப்பு வந்தப்புறம் அதை புறக்கனிக்கறதும் ஒரு தொடர்கதையாவே போயிட்டிருக்கு. இது போதாதுன்னு இப்போ ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் எதிர்ப்பு. ஓகனேக்கலே அவங்களுதாம். என்ன கொடுமை மேடம் (சார் சார்னு எத்தனை வாட்டி எழுதறது, அதான் சினிமா இயக்குனர்கள் சொல்ற மாதிரி முற்றிலும் வித்தியாசமாக மேடம்;) இது? வழக்கம் போல மத்திய அரசு இதை பெருசா கண்டுக்கவே இல்ல.

எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது. தமிழர்களுக்கு மட்டும் ஏன் நாலா பக்கமும் இடி விழுது? அப்படி என்ன காண்டு நம்ம மேல? வெளிநாடுகளில் இந்தியர்களை மதிக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலத்தவர்களை மதிப்பது கிடையாது. தண்ணீர் பிரச்சனையை விட்டுருவோம். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு பஸ்கள் உடைப்பு, கர்நாடகத்துக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் ரத்து, பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீது தாக்குதல், தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போதெல்லாம் தமிழர்கள் குறி வைத்து தாக்க படுகின்றனர். அவர்களின் உடைமைகள் கொளுத்தப்படுகின்றன.

ஏன் இந்த கொலை வெறி? தண்ணி தர முடியாதுன்னா தர முடியாதுன்னு சொல்லுங்க. இந்த மாதிரி தாக்குதல் நடத்துறதால என்னத்த சாதிக்க போறீங்க? இதை எல்லாம் நினைக்கும் பொழுது "மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது மாறுவதெப்போ தீறுவதெப்போ நம்ம கவலே" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது.

இந்த மாதிரி அடுத்தவங்க கையை எதிர் பார்க்காம, மழை நீர் சேகரித்தல், மரங்கள் வளர்த்தல், குளம் ஏரி தூர் வாருதல், கடல் நீரை குடி நீராக்கல் போன்ற திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் தேவையை நாமாக தீர்த்துக்கொள்ள தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

0 comments: