Friday, November 23, 2007

அரைத்த மாவு!

100 ஆண்டு கால இந்திய சினிமாவில் நிறைய சாதனைகள் உள்ளன. இந்திய சினிமா ஜூலை 7, 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் சினிமா ஆரம்பித்து 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதில் தனி மனித சாதனைகள் ஏராளம். அதை எல்லாம் பற்றி நான் இங்கு பேசப் போவதில்லை.

இத்தனை வருட காலத்திலும் ஒரு சில விஷயங்களை காட்சிகளை பல படங்களில் ஒரே மாதிரி தான் எடுக்கிறார்கள். இதில் சில இன்றும் தொடர்கிறது. இது போல காட்சிகள் வரும்போது அடுத்து என்ன நடக்கும்னு சின்ன பசங்களுக்கு கூட தெரியும். அவற்றை பற்றி தான் நான் இங்கு சொல்லப் போகிறேன். இதுல நிறைய 70-80 களில் வந்தவையே.

காட்சி 1: யாராச்சும் ஒருத்தர் படுத்த படுக்கையா இருப்பார். ஏதோ உண்மைய சொல்ல பல நாளா முயற்சி பண்ணுவார். கடைசியா பாதி மட்டேற சொல்லிட்டு உயிரை விட்டுருவார். ஹய்யோ ஹய்யோ!

காட்சி 2: இது ரொம்ப பிரபலம். சின்ன வயசுல இந்த மாதிரி படம் ஆரமிச்சுதுனா ரொம்ப ஆவலா குந்திகின்னு பார்ப்போம். எதுத்த உடனேயே ஒரு கொள்ளை கார கும்பல் வந்து ஒரு வீட்டுல இருக்கற எல்லாரையும் போட்டு தள்ளிடுவாங்க. அதுல ஒரே ஒரு சின்ன பயனோ பொன்னோ மட்டும் தப்பிச்சு போயிடுவாங்க. இவங்க தான் படத்தோட கதாநாயகன் அல்லது கதாநாயகி. இன்னும் சில படத்துல தப்பிச்சி போனவங்க கூட ஏதாச்சும் வீட்டு அல்லது காட்டு விலங்கும் சேர்ந்துக்கும். ஹ்ம்ம்... ஆத்தாளுக்கு ஒரு மாத்தாளு, அடுப்பு கட்டைக்கு ஒரு தொடப்ப கட்ட! இந்த பழ மொழிய எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. இத ரொம்ப நாளா உபயோகிக்கனும்னு பார்த்தேன்...அதான்;)

காட்சி 3: அப்புறம் இந்த இரட்டை வேடம் போட்டு ஹீரோ நடிக்கும் படத்துல பார்த்தீங்கனா, அவங்க சகோதரர்களா வந்தா படம் ஆரமிக்கும் போதே பிரிஞ்சுடுவாங்க. அப்புறம் கடைசியில ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்னு சேருவாங்க. அப்ப கூட யாருக்காச்சும் ஜோடி இல்லனா அவங்கள கொன்னுடுவாங்க. அவ்வ்வ்வுங்!

காட்சி 4: ஒரு பயங்கர வில்லன காட்டுவாங்க. அவன எதிர்த்து யார் பேசினாலும் அவங்கள உடனே பேச்சே இல்லாம கொன்னுடுவான் வில்லன். ஆனா நம்ம ஹீரோ பேசினா மட்டும் முதல மாத்தி மாத்தி டயலாக் தான். அப்புறம் எப்படியாவது ஹீரோவ பிடிசிடுவான் வில்லன். ஆனா உடனே சாகடிக்க மாட்டான். ஹீரோவ ஒரு ரூம்ல வச்சு கட்டி(ரொம்ப ஈசியா அவுக்குற மாதிரி) ஒரு குண்டு வச்சுட்டு(அதுக்கும் வெடிக்க நேரம் ஜாஸ்தியா வச்சு ட்டு) போயிடுவான். ஹீரோ தப்பிச்சு வந்து வில்லன கொன்னுடுவாரு. இஸ்ஸ்ஸப்பா! இப்பவே கண்ண கட்டுதே!


காட்சி 5: ஒரு படத்துல ஹீரோ நல்லா பொண்ணுகள கிண்டல் பண்ணி பாட்டு எல்லாம் பாடுவாரு. இத ரொம்ப ஜாலியா காட்டுவாய்ங்க. இன்னொரு படம். அதே காட்சி. ஆனா இப்போ ஹீரோக்கு பதில் வில்லன். அப்புறம் என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். என்ன கொடுமை இது?

காட்சி 6: இது காலா காலத்துக்கும் நடந்துட்டு வருது. ஹீரோயின்னுக்கும் வேறு ஒருத்தருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிடும். ஆனா கடைசியில நம்ம ஹீரோ பொண்ண தட்டிட்டு போயிடுவாரு. இதுக்காக நல்லவரா இருந்த முதல்ல நிச்சயமானவர கெட்டவரா மாத்திடுவாங்க. ரைட்டு விடு!

காட்சி 7: இதான் எனக்கு தெரிந்த காட்சிகள்லயே டாப்புங்க. படத்துல யாராச்சும் ரெண்டு பேரு ரொம்ப நல்லா அன்யோன்யமா இருப்பாங்க. திடீல்னு அவங்களுக்குள்ள ஒரு பெரிய பிரச்சனை வரும். ஆனா மெய்யாலுமே என்ன நடந்ததுன்னு ஒருத்தருக்கு தெரியாது. இன்னொருத்தர் அதை சொல்ல வருவார். அப்ப இவரு:

"வேண்டாம்! நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கல. இங்க இருந்து போயிடு"

"நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்கு தெரியும். வேண்டாம்! போயிடு!"

இப்படி இல்லனா, பக்கத்துல இருக்க ஒருத்தர பார்த்து, "அவன இங்க இருந்து போகச் சொல்லு. இல்ல நான் மனுஷனா இருக்க மாட்டேன்", இப்படி எல்லாம் சொல்லி அனுப்பிடுவாரு.

இதுல இன்னும் கொடுமை என்னன்னா, உண்மைய சொல்ல முயற்சி பண்றவர், கடைசி வரைக்கும் "நான் என்ன சொல்ல வரன்னா, நான் என்ன சொல்ல வரன்னா" இப்படி சொல்லியே நேரத்த ஓட்டிடுவார். அவரு சொல்ல வர உண்மை "நான் என்ன சொல்ல வரன்னா"வை விட சின்னதா தான் இருக்கும்!

அப்புறம் படத்தோட கடைசியில ஒரு சின்ன குழந்தையோ அல்லது சம்பந்தமே இல்லாத ஒருத்தரோ உண்மைய சொல்ல இவங்க ஒன்னு சேர்ந்துடுவாங்க. சொல்ல போனா இந்த மேட்டர வச்சு தான் முழு கதையே! லைட்டா வலிக்குதா?

இஸ்ஸப்பாடா......என் மனசுல இருந்தத எல்லாம் கொட்டிட்டேன்!

2 comments:

தமிழினி..... said...

இன்னொரு காட்சியை மறந்துட்டிங்க சத்தியா....அது படத்துலே வர ஹீரோ intro காட்சி.. பத்து பேர அடிச்சு போட்டு மாவீரன் ரேஞ்சுக்கு நடந்து வர்றது...இவங்க திருந்த மாட்டாங்க..... :))

Sathiya said...

ஆமாங்க. இன்னும் நிறைய இருக்கு. நீங்க சொன்னது போக, நெஞ்சுல குண்டு பட்டதுக்கப்புறம் 10 நிமிஷம் டயலாக் பேசிட்டு சாவாங்களே அதுவும் ஒன்னு;)