Monday, May 26, 2008

புலாவ் தியோமன் - ஓர் அழகிய தீவு

நான் ரொம்ப நாளா பயண கட்டுரை எழுதனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். இப்போ தான் அதுக்கு நேரம் கை கூடி வந்திருக்குன்னு நினைக்கிறேன்(எழுத இப்போதைக்கு வேற ஒண்ணும் தோனலைங்க அதான்;). என்னுடைய முதல் பயண கட்டுரையா இதுவரை நான் பயணித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடமான 'புலாவ் தியோமன்'னை பற்றி எழுதுகிறேன்.


சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு சொர்க்கம் இது எனலாம். ஏன், மலேசியா நாட்டில் உள்ள சொர்கம்னு சொல்ல கூடாதான்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க கூடாது. நான் சிங்கப்பூரில் வசிப்பதால் அப்படி எழுதினேன். புலாவ் தியோமன் மலேசியா நாட்டில் உள்ள ஒரு அழகிய தீவு ஆகும். புலாவ் என்றால் மலாய் பாஷையில் தீவு என்று அர்த்தம். இங்குள்ள பல தீவின் பேர்களுக்கு முன்னால் இந்த 'புலாவ்' என்ற வார்த்தை இருக்கும். தியோமன் உலகின் முதல் பத்து அழகிய தீவுகளில் ஒன்றாக விளங்கிற்று. இப்பவுமானு தெரியல. இதை பற்றி இன்னும் விலாவாரியாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


நான் தாய்லாந்து நாட்டில் இருக்கும் 'புக்கெட்' தீவுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு கிடைக்கும் தனிமையும், அமைதியும் அங்கு இல்லை. ஒரு இரண்டு தெருவை சேர்த்து வைத்தா எவ்வளவு பெருசா இருக்குமோ அந்த அளவுக்கு ஒரு சிறிய இடம், அதில் ஒரே ஒரு ரிசோர்ட்(resort), அதற்கு சொந்தமான ஒரு இருபது, முப்பது குடில்கள், குடிலின் முன் பக்கத்தில் ஒரு இருபதே மீட்டர் தொலைவில் கடல், பின் புறம் பெரிய மலையில் அடர்ந்த காடு, இது தாங்க புலாவ் தியோமன்.


நாங்கள் அங்கு சென்ற நேரமும் மிகச்சரியான நேரம் போல. மொத்தமே ஒரு நாப்பது பேர் தான் இருந்திருப்பார்கள். மூன்று நாள், இரண்டு இரவு அங்கு தங்கி இருந்தோம். மார்ச் முதல் அக்டோபர் வரை இங்கு பயணம் செய்ய தகுந்த நேரமாகும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த தீவு மோசமான காற்று மற்றும் தட்பவெப்ப நிலையால் மூடப்பட்டிருக்கும்.

இங்கு செல்வதற்கு மெர்சிங்(Mersing) என்னும் இடத்தில் இருந்து பயணப்படகு மூலம் செல்ல வேண்டும். இந்த பயணத்திற்கு ஒரு மணி நேரம் ஆகும். சிங்கப்பூரில் இருந்து மெர்சிங் செல்வதற்கு பேருந்தில் ஒரு ஆறு மணி நேரம் ஆகும். பெர்ஜாயா ஏர்(Berjaya Air) என்னும் விமானம் மூலம் கூட இங்கு செல்லலாம். இது பெர்ஜாய ரிசோர்ட்டில் இருக்கும் விமான தளத்தில் வந்து இறங்கும். அங்கிருந்து மற்ற ரிசோர்ட்களுக்கு செல்ல பயணப்படகு மூலம் செல்ல வேண்டும்.

கீழே உள்ள படத்தில் நாங்கள் மேர்சிங்கில் இருந்து தியோமனுக்கு பயணப்படகில் புறப்பட்டு கொண்டிருக்கிறோம்.


தியோமனில் ஒவ்வொரு ரிசோர்டும் இப்படி தான் தனித்தனியாக இருக்கும்.

ஒரு ரிசோர்ட்டில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரிசோர்டிற்கு செல்ல பயணப்படகு மூலம் தான் செல்ல முடியும். நீச்சல் தெரிந்தால் நீந்தி செல்லலாம்.

இங்கு கடல் நீர் மிக தெள்ளத்தெளிவாக இருக்கும். தண்ணீருக்கு அடியில் அனைத்தும் மிகத்தெளிவாக தெரியும். கரையில் இருந்தே இங்கு பவழப்பாறைகள் ஏராளமாக இருக்கும். கடற்கரையில் இருக்கும் பவழப்பாறைகள் பெரும்பாலானவை இறந்து போனவைகளாக இருக்கும். சற்று உள்ளே சென்றால் கண்ணை கவரும் வகையில் மீன்களும், பவழப்பாறைகளும் இருக்கும்.


நாங்கள் தங்கி இருந்த விடுதி இது தான். இதில் மொத்தம் நாலு அறைகள் இருக்கும். மேலே உள்ள இரண்டில் நானும் என் கூட வந்த நண்பரும் தங்கி இருந்தோம். இரண்டையும் உள்ளே உள்ள இரு கதவுகளை திறந்து இணைத்து கொள்ளலாம். இதிலிருந்து ஒரு முப்பது மீட்டர் தொலைவில் கடற்கரை. பின்னாடி அடர்ந்த காட்டுடன் மலை. காலையில் எழுந்தவுடன் அந்த மாடி முகப்பில் குந்திக்கிட்டு, கடற்கரையை பார்த்து கொண்டே தேநீர் அருந்துவதில் உள்ள சுகம் இருக்கே, அது சொல்லி தெரியாது.


இந்த விடுதியை பாருங்கள். இது கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது. கதவை திறந்தால் நேரா கடல் தான். இரவு வந்தால் இங்கு கடல் சற்று உள் வாங்குவதை கண்டு சற்றே பயம் எட்டிப் பார்த்தது. எல்லாம் சுனாமி பயம்தான். இங்கு ஓடி ஒளிய கூட முடியாது. விடிய விடிய அது தானாக பழையபடி மேலே வந்துவிடும்.



இந்த படத்தில் தெரிவது பக்கத்தில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சி. இங்கு செல்ல எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இங்கிருந்து பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது.



இருந்தாலும் நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே ராக் பால்ஸ் என்ற இந்த நீர் விழுச்சி இருந்தது. காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். சுத்திலும் அடர்ந்த காடு. ஆள் நடமாட்டமே இல்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கையில் கிடைத்த இரண்டு குச்சியை எடுத்து கொண்டு நடந்தோம். கொஞ்ச தூரம் சென்றதும் வழி தெரிய வில்லை. திரும்பி விடலாம் என்று எண்ணிய போது ஒரு அழகிய சீன ஜோடிகள் குளித்து விட்டு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்பாடா என்று அவர்கள் வந்த வழியே சென்று அந்த நீர்வீழ்ச்சியை அடைந்தோம். ஒரு பத்து பேர் அங்கு இருந்தனர். தண்ணீர் சுத்தமாகவும், இனிப்பாகவும், சில்லென்று இருந்தது. ஒரு குளியலை போட்டு விட்டு திரும்பினோம்.
இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது கடல் கரையிலேயே தெரியும் பவழப்பாறைகள். தண்ணீருக்குள் நடந்தே சென்றால் இன்னும் அழகான கண்ணை கவரும் வகையில் பவழப்பாறைகளை காணலாம். மிகக் குறைந்த விலைக்கு அங்கு கிடைக்கும் காப்புச்சட்டையும்(Life Jacket), முகமூடியும்(Mask) வாங்கி கொண்டால் ஸ்நோர்கெல்லிங்(Snorkelling) செய்து இன்னும் நன்றாக பார்க்கலாம்.

ஸ்குபா டைவிங், ஸ்நோர்கெல்லிங், வாட்டர் பைக், கநோயிங்(Canoeing) போன்ற தண்ணீர் விளையாட்டுகளும் இங்கு இருக்கிறது. ஸ்குபா டைவிங்கிற்கு இங்கு முறையான பயிற்சியும் அளிக்கிறார்கள். பல வெளிநாட்டினர் இங்கு ஸ்குபா டைவிங் கற்று கொள்ள வருகிறார்கள். பயிற்சி முடிவில் அதற்கான சான்றிதழும் தருகிறார்கள்.


மரைன் பார்க்(Marine Park) என்றொரு இடத்திற்கு சென்றால் பலவகையான வண்ண வண்ண மீன்களை காணலாம். அவற்றுடன் சேர்ந்து நீங்களும் நீந்தலாம். கடலின் கரையில் இருந்து ஒரு பெரும் பகுதியை அடி வரை வலை போட்டு தனியாக பிரித்திருப்பார்கள். மீன்களால் அதை மீறி கடலுக்குள் செல்ல முடியாது. கீழே உள்ள படத்தில் நான் மீன்களுக்கு உணவு அளிப்பதை காணலாம்.


இது தான் நாங்கள் தங்கி இருந்த ரிசோர்ட்டின் பீச் பார். இங்குள்ள உணவகத்தில் உணவு வகைகள் எல்லாம் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக கடல் வகை உணவுகள். அதனால் எங்களுக்கு சாப்பாட்டு குறையே தெரியவில்லை. கொஞ்சம் பணக்குறை தான் தெரிந்தது. ஏனென்றால் இங்கு உணவு கொஞ்சம் விலை கூட.



நீச்சல் குளம், மேசைக் கோல் பந்தாட்டம்(Snooker), ஸ்பா(Spa) போன்றவைகளும் இங்கு உள்ளன. ஸ்நூக்கர் மட்டும் ஆடினோம். மற்ற இரண்டும் முயற்சி செய்து பார்க்கவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தின் கடற்கரை நீளம் இது தான். அந்த கடைசியில் ஒரு குட்டி தீவு தெரிகிறதா? அதற்கும் சென்று பார்த்தோம். ரொம்ப அழகான தீவு அது. சுற்றிலும் தெள்ளத்தெளிவான தண்ணீர். கொஞ்சம் சாகசமானதாகவும் இருந்தது.
போகும் வழியில் இந்த பழைய படகுகளை கண்டதும் அனகோண்டா படம் ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்தியது.

இந்த படத்தில் எனக்கு வலது பக்கத்தில் தான் அந்த குட்டி தீவு. என் பின் புறத்தில் தெரிவது பெர்ஜாயா ரிசோர்ட். அப்படியே தண்ணிரில் நீந்தி சென்றால் அந்த ரிசோர்ட்டுக்கு சென்று விடலாம். தண்ணீரை பார்த்தீர்களா? எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. இங்கே ஒரு இரண்டு மணி நேரம் செலவழித்தோம்.

இந்த இடத்தில் தான் நான் எனது கால் தடுக்கி என் புகைப்படக்கருவியை தண்ணீரில் நனைத்து விட்டேன். அதுக்கப்புறம் அது வேலை செய்யவில்லை. அதை கொடுத்து விட்டு வேறு புகைப்பட கருவியை வாங்குவதாக ஆயிற்று. ரொம்ப வருத்தமாக இருந்தது. நல்ல வேளையாக நான் அதில் பிடித்த படங்கள் ஒண்ணும் ஆகவில்லை. உப்பு தண்ணீர் புகைப்பட கருவிக்கு பயங்கரமான எதிரி. ஜாக்கிரதையாக இருங்கள்!

அவ்வளோதாங்க! நாங்கள் தியோமன்னை விட்டு கிளம்பும் போது அந்த வானமே கண்ணீர்விட்டு அழ தயாராகி விட்டது. கிளம்பும் போது படகில் இருந்து எடுத்த படத்தை நீங்களே பாருங்கள். அதை கான மனம் இல்லாமல் நாங்கள் பிரியா விடை பெற்று கொண்டு கிளம்பி விட்டோம்.

12 comments:

ambi said...

சூப்பர், படங்கள் எல்லாம் அருமை. நேர்ல பாத்த மாதிரி இருக்கு. :))

Anonymous said...

அருமையான அனுபவங்கள்.... கூடவே உங்களுக்கு ஆன செலவுகளையும் சொல்லியிருந்தால் நாமும் அதற்குத் தகுந்த மாதிரி பட்ஜெட் போட்டு பார்க்கலாமே... மாலிக். ஜித்தா... malik25@gmail.com

Anonymous said...

அருமையான அனுபவங்கள்.... கூடவே உங்களுக்கு ஆன செலவுகளையும் சொல்லியிருந்தால் நாமும் அதற்குத் தகுந்த மாதிரி பட்ஜெட் போட்டு பார்க்கலாமே... மாலிக். ஜித்தா... malik25@gmail.com

வடுவூர் குமார் said...

மரக்கறி ஆளுங்களுக்கு சாப்பாடு பிரச்சனை ஒன்றும் இல்லையே??

Sathiya said...

@அம்பி:
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்பி. என் Canon S3-IS புகைப்பட கருவியில் கடைசியாக எடுத்த படங்கள் அவை. அணையும் விளக்கு பிரகாசமாய் எரியும் இல்லையா;)

@மாலிக் ஜித்தா:
நன்றி மாலிக்! எழுதனும்னு நெனச்சேன் மறந்துட்டேன். தியோமன் மூன்று நாள், இரண்டு இரவு சென்று வர ஒருவருக்கு இருநூறு முதல் முன்னூறு சிங்கப்பூர் வெள்ளிகள் வரை செலவாகும். இது நாம் தேர்ந்தெடுக்கும் விடுதியையும், செல்லும் நாளையும் பொறுத்து வேறுபடும். இதில் போக்குவரத்து, தங்கும் விடுதிக்கான செலவு, இலவச நாஸ்டா மற்றும் ஏதாவது ஒரு கேளிக்கை(சில விடுதியில் இது இருக்காது) அடங்கும்.

Sathiya said...

@வடுவூர் குமார்:

வருகைக்கு நன்றி வடுவூர் குமார். மரக்கறி என்றால் சைவம் என்று இப்போதான் கூகிள் மூலம் தெரிஞ்சிகிட்டேன். என்னை தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி.

மரக்கறி ஆளுங்களுக்கு பிரச்சனை எதுவும் இருக்காது. நானும் கூட சனிக்கிழமைகளில் சைவ உணவு மட்டும் தான் சாப்பிடுவேன். காய்கறி பொறித்த சோறு(Vegetable Fried Rice)(சரியா?), காய்கறி பீச்சா(Vegetable Pizza) போன்ற சில உணவு வகைகள் கிடைக்கும். ஆனால் அதிக வகைகள் இருக்காது.

கப்பி | Kappi said...

புலாவ்-னு பார்த்ததும் ஏதோ சாப்பாட்டு ஐயிட்டம் போலன்னு ஓடி வந்தேன்..ஹி ஹி

படங்கள் அனைத்தும் சூப்பர்..விரிவாக அருமையா சொல்லியிருக்கீங்க!!

அது என்ன இந்த சீசன்ல ஊர் சுத்த போறவய்ங்க எல்லாம் கேமராவை தண்ணில குளிப்பாட்டிட்டு வர்றீங்க? :))

(இன்னொருத்தர் சிவிஆரு அண்ணாச்சி)

Sathiya said...

@கப்பி:

காலங்காத்தால பசியோட வந்து பார்த்திருபீங்க போல;) நன்றி கப்பி. இது நான் போன சீசன்ல போன இடம். அப்போ இருந்து பதிவு போடனும்னு நினைத்து இப்போ தான் போட முடிஞ்சுது.

நானும் சிவிஆரோட விஷயத்த பிளிக்கர்ல படித்தேன். அவர் கேமரா இப்போ நல்லா வேலை செய்யுது. எந்து போயே போச்சு...it's gone;)

ambi said...

Linked in valasaram:

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_30.html

Sathiya said...

நன்றி அம்பி!

நிலா said...

ஆமா மாமா உங்க பக்கத்துல நீந்தும் மீன்களும் மரக்கறிதான் திங்குமா? ரொம்ப தில்லா போஸ் கொடுக்கறீங்களே?

Sathiya said...

நிலா பாப்பா, நாங்கெல்லாம் ஆபத்த பெட்ஷீட்டா போட்டு படுக்குறவங்க! உசுருக்கு பயப்படாத எங்க முன்னாடி இந்த மீன்களெல்லாம் தூசு;)

சுறா மட்டும் இருக்கான்னு கேட்டுட்டு இறங்குவோம். அது இல்லாம இந்த இடம் ரொம்ப பாதுகாப்பானது. நடு கடல்ல இறங்கும் போது தான் கொஞ்சம் பயம் இருக்கும். கூட ஆட்கள் இருக்கறதுனால மனதை தேதிக்குவோம்!