Monday, January 7, 2008

தாரே சமீன் பர் (Taare Zameen Par) திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: ஆமிர் கான் (Aamir Khan), தர்ஷீல் ஸாபரி (Darsheel Safary), திஸ்கா சோப்ரா (Tisca Chopra)
இயக்குனர்: ஆமிர் கான் (Aamir Khan)
இசை: ஷங்கர் மஹாதேவன் (Shankar Mahadevan), ஏசான் நூராணி (Ehsaan Noorani), லாய் மென்டான்ஸா (Loy Mendonsa)
கதை: அமோல் குப்டே (Amole Gupte)
எடிட்டிங்: தீபா பாடியா (Deepa Bhatia)
ஒளிப்பதிவு: சேது (Setu)
தயாரிப்பு: ஆமிர் கான் (Aamir Khan)
இணை தயாரிப்பு: அஜய் பிஜ்லி (Ajay Bijli) & சஞ்சீவ் கே. பிஜ்லி (Sanjeev K. Bijli)


நட்சத்திரங்கள் பூமியில்(Taare Zameen Par)...என்ன ஒரு அழகான தலைப்பு. அதற்கு ஏற்ப மிக அழகான ஒரு படத்தை நமக்கு தந்திருக்கிறார் ஆமிர் கான். இது அவருடைய முதல் இயக்கம் என்பது சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு அருமையாக எடுத்திருக்கிறார் படத்தை. இப்படம் குழந்தைகள் படம் மட்டும் அல்ல, முக்கியமாக எல்லா பெற்றோர்களும், ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம்.

படத்தின் கதாநாயகன் ஆமிர் கான் அல்ல, குழந்தை நட்சத்திரமாக வரும் தர்ஷீல் ஸாபரி தான் இப்படத்தின் கதாநாயகன். ஆமிர் கானையே தன் நடிப்பால் மிஞ்சி விட்டான் இந்த சிறுவன். இச்சிறுவனை பற்றி தான் இப்படத்தின் கதையே. ஆமிர் கான் படத்தின் பாதியில் தான் அறிமுகம் ஆகிறார். இச்சிறுவன் டிஸ்லெக்ஸ்யா (dyslexia) என்ற ஒரு விதமான இயலாமையால் பாதிக்கப்படுகிறான். எழுத்துக்களை அறிவதிலும், படிப்பதிலும் ஏற்படும் சிரமமே டிஸ்லெக்ஸ்யா. உதாரணத்துக்கு "b/d" "w/m" போன்று ஒரே மாதிரியாக தோன்றும் எழுத்துக்களை பார்க்கும் பொழுது குழப்பம் ஏற்படும். எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதி விடுவர்.


இதனால் மூன்றாம் வகுப்பு படிக்கும் இச்சிறுவனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிறான். பாடங்களில் மட்டுமே இவன் இப்படி, ஆனால் ஓவியம் வரைவதில் இவன் தன் வயதிற்கு மிஞ்சிய ஆற்றல் கொண்டவன். இவனது சிரமம் தெரியாத ஆசிரியர்களும், பெற்றோர்களும் இவனை எவ்வளவோ கண்டித்து பார்த்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாததால் இவனை போர்டிங் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். விருப்பமில்லாமல் போர்டிங் பள்ளியில் சேரும் அச்சிறுவனின் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் அவன் யாரிடமும் பேசுவதையே நிறுத்தி விடுகிறான், தன் பெற்றோரிடம் கூட. இந்நிலையில் தான் ஆமிர் கான் கலை ஆசிரியராக அந்த பள்ளிக்கு வருகிறார். இச்சிறுவனின் பிரச்சனையை தெரிந்து கொண்டு அதை தீர்த்து வைக்க போராடுகிறார். இதுவே படத்தின் கதை.

தவமாய் தவமிருந்து படத்தை யாரெல்லாம் அழுது கொண்டே பார்த்தீர்களோ அவங்கெல்லாம் இந்த படத்தை பார்க்க செல்லும் பொழுது மறக்காம கைக்குட்டையை எடுத்து செல்லவும். ரொம்ப தேவைப்படும். ஒவ்வொரு நெஞ்சை நக்குற காட்சியிலும் பக்கத்துல உக்கார்ந்து இருக்கவங்களுக்கு தெரியாம கைக்குட்டையை எடுத்து கண்ணை துடைச்சிட்டு வைக்கறதுக்குள்ள...அப்பப்பா போதும் போதும்னு ஆயிடுது. இதுல முக்கியமா அந்த சிறுவனுடைய அப்பா, அம்மா பாத்திரங்களை சொல்லியே ஆக வேண்டும். ரெண்டு பேரும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேர் கேரக்டர பார்க்கும் பொழுது எல்லாருக்கும் அவங்க அவங்க அப்பா அம்மா ஞாபகம் வருவாங்க. படம் கொஞ்சம் மெதுவா தான் போது. ஆனாலும் நல்லா இருக்கு. அசுதோஷ் கௌரிகர்(Ashutosh Gowrikar - லகான் & ஸ்வதேஸ்) ஸ்டைல் கொஞ்சம் படத்துல தெரியுது. படத்தில் சில காட்சிகளில் மிக அழகாக அனிமேஷன் செய்து குழந்தைகளை கவரும் வண்ணம் வித்யாசமாக காட்டியிருக்கிறார்கள். இந்த படம் மெதுவாக பிக் அப் ஆகி சூப்பர் ஹிட் ஆகும்.

படத்தின் பாடல்கள் எல்லாம் மிக அருமை. நம்ம ஷங்கர் மஹாதேவன் "மா"(ஹிந்தி 'அம்மா') என்று ஒரு பாடல் பாடி இருக்கிறார். அதை கண்டிப்பா கேளுங்க. பாட்டும் அருமை, பாட்டின் வரிகளும், கருத்தும் அதை விட அருமை. இந்த படத்துல சொல்லி இருக்கற விஷயம் (Dyslexia) இதுக்கு முன்னாடி நானே கேள்வி பட்டதில்லை. நூத்துல பத்து சதவீதம் பேருக்கு இந்த மாதிரி பிரச்சனை இருக்குமாம். அதனால எல்லாரும் இதை பத்தி தெரிஞ்சிகிட்டா நல்லது.

நம் வீடுகளில் தினசரி நடக்கும் விஷயங்களைக் கொண்டு, நம் உணர்வுகளை தூண்டும் அளவிற்கு மிக அழகாக யதார்த்தமாக எடுக்க பட்டிருக்கும் இப்படத்தை கண்டிப்பா பாருங்க. ஆமிர் கானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

1 comments:

கைப்புள்ள said...

அண்ணா வணக்கம்ங்கோ....கொக்கி ஒன்னு போட்டுருக்கேங்கோ...நீங்க வந்து தொடரணுங்கங்கங்கோ...

http://kaipullai.blogspot.com/2008/01/blog-post_11.html