Saturday, February 2, 2008

செய்திகள் வாசிப்பது வடக்குபட்டு ராமசாமி!

இந்த செய்தி என்ன ரொம்பவே டச் பண்ணிடுச்சு. இடுக்கியில் இந்த வாரம் ஒரு தலைமை ஆசிரியை தனது பள்ளிக்கூடத்தில் பணம் திருடிய மாணவனை திருத்துவதற்காக தனக்கு தானே பிரம்படி கொடுத்துக்கொண்டாராம். திருடியவர் தனது குற்றத்தை ஒப்பு கொண்டு பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்று இவர் அன்போடு கேட்டும் எந்த பலனும் இல்லை. உடனே பியூனிடம் ஒரு பிரம்பை கொண்டு வர உத்தரவிட்டார். 'யாருக்கு அடி விழா போகிறதோ?' என்று மாணவர்கள் நடுங்கியபடி இருக்க, இவர் தன்னை தானே அடிக்க ஆரம்பித்தார். மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தடுக்க முயன்றும் அவர் கேட்கவில்லை.

சிறிது நேரத்திற்கு பின் அந்த பணத்தை திருடிய மாணவன் கண்ணீர் விட்டு அழுத படி முன்னே வந்து, "என்னை மன்னித்து விடுங்கள் டீச்சர். நான் தன் பணத்தை திருடினேன். நான் திருந்தி விட்டேன். இனி இது போல் தப்பு செய்ய மாட்டேன்" என்று கூறினானாம். ஆசிரியை மீனாட்சி குட்டி அம்மா அந்த மாணவனை மன்னித்து அனுப்பி வைத்தாராம்.

இதை விட ஒரு சிறந்த தண்டனை அந்த மாணவருக்கு கொடுக்க முடியுமா? இனி அவன் திருடுவதை பற்றி கனவு கூட காண மாட்டான். மீனாட்சி குட்டி அம்மா 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறாராம். ஆனால் இது வரை அவர் யாரையும் அடித்ததில்லயாம். என் சார்பில் இந்த ஆசிரியைக்கு ஒரு ஓஓஓஓஒ போடறேன்!


*****

"இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாரத ரத்னா விருதை வைத்து பல சர்ச்சைகள் சமீபத்தில் உருவாகின. வாஜ்பாய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பலருடைய பெயர்களும் இந்த விருதுக்காக பலரால் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், 2007ம் ஆண்டுக்கான பாரத ரத்னாவை யாருக்கும் வழங்குவதில்லை என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது."

அப்பாடா! விட்டா ராமர் பாலம், காவேரி பிரச்சனை மாதிரி இதையும் அரசியல் ஆக்கிட்டிருப்பாங்க. பாரத ரத்னா விருதுக்கு ஒரு மரியாதையே இல்லாம போச்சு (நான் நம்ம இளையராஜாவ சொல்லலீங்க). என்ன கேட்டா நம்ம இளைய தளபதி டாக்டர் விஜய்க்கு தான் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்;)

*****

"சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க கூடாது என்று மத்திய மந்திரி அன்புமணி விடுத்த வேண்டுகோளை நடிகர் ஷாருக்கான் நிராகரித்துள்ளார். சினிமா துறையினருக்கு படைப்பு சுதந்திரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்."

புகை பிடிக்கிறதுல என்ன படைப்பு சுதந்திரம்? இவரு என்னத்த கிங் ஹாப் பாலிவுட்டோ?

*****

"பொய் வழக்கு போடப்பட்டது தி.மு.க. ஆட்சி காலத்திலா அல்லது அ.தி.மு.க. ஆட்சி காலத்திலா என்பது குறித்து சட்டசபையில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது."

அட்ரா, அட்ரா...இந்த மாதிரி உண்மை உங்க வாயில இருந்தே வெளியே வந்தா சர்தான்!

*****

"சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரேயா அணிந்து வந்தா ஆபாச உடை விவகாரத்தை நேற்று சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி நடிகைகள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டுவர முடியாது என்றார்."

ஆஹா! சட்ட சபையில பேச வேண்டிய ரொம்ப முக்கியமான பிரச்சனை இது தாங்க. எல்லாரும் என்னன்னவோ யோசிச்சிகிட்டிருக்கப்ப இவரு மட்டும் எதை பத்தி யோசிச்சிகிட்டிருக்காருன்னு பாருங்க?

*****

ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. நீதிபதிகள் "ஒரே விஷயத்தில் எத்தனை மனுக்கள்தான் தாக்கல் செய்வீர்கள்?" என்று கேட்டனர். மேலும், "சேது சமுத்திர திட்டத்துக்கு 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து ஒரு மக்கள் பிரதிநிதி வழக்கு போடுகிறார். அந்த அமைப்பை யாரும் பார்த்து இல்லை. அதை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது பற்றி யாரும் சிந்திக்கவில்லை. இந்த நிலையில் அவரிடம் இருந்து இந்த கோரிக்கை வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நீதிபதிகள் கருத்தை கேட்ட வக்கீல் குரு கிருஷ்ண குமார், "ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வாபஸ் பெறுவதாக கூறினார்.

இவங்க பண்ற காமெடிக்கு அளவே இல்லாம போச்சுய்யா. நீதிபதிகள் ஆச்சரிய படர அளவிற்கு இதுல ஒண்ணுமில்லையே? இதெல்லாம் அவங்களுக்கு ஜகஜம் தானே! இவங்க எப்பவுமே இப்படி தான் எஜமான்!

1 comments:

Anonymous said...

cheidhigal nanraaga vasithaaiii ;)

-Dhina