Saturday, January 14, 2012

நண்பன் - 100% ரீமேக்


3 Idiots எல்லாரும் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை என் கூட வேலை பார்க்கும் சீனா, பிலிப்பின்ஸ் மக்கள் கூட விரும்பி பார்த்தாங்க. இதை பார்க்காத தமிழ் மக்களுக்காக ரீமேக் பண்ணியதற்காக ஷங்கரை பாராட்டனும். இதனால இன்னொரு நல்ல விஷயம், multi-starrer படங்கள் பாலிவுட் மாதிரி இங்கேயும் வந்திருக்கு. இனிமே இந்த மாதிரி வந்தா தான் கொஞ்சமாவது மக்கள் தியேட்டர்க்கு வந்து படம் பார்ப்பாங்க.

ஷங்கர்
ஜெயம் ராஜா மாதிரி ரொம்ப நல்லா ரீமேக் பண்ணி இருக்காரு. வசனம் எல்லாம் நல்லா இருக்கு. ஒரிஜினல் படத்துல கொண்டு வந்த அதே பீலிங்க்ஸ் கொண்டு வந்துருக்காரு. பாட்டு எல்லாம் மட்டும் ஷங்கர் படத்துல ஏற்கனவே பார்த்த மாதிரி தான் இருக்கு. படத்துக்கு சரியான ஆட்களை தேர்வு செய்திருக்காரு இலியனா தவிர.

விஜய்
அப்பாடி! ரொம்ப நாள் கழிச்சு பஞ்ச் டயலாக், அடி தடி, ஹீரோயிசம் இல்லாம வர்றாரு. இன்னொரு நல்ல விஷயம் அறிவுரை சொல்ற மாதிரி கிளைமாக்ஸ்ல நீளமான வசனம் கிடையாது. ஆமிர் கான் கூட எல்லாம் இவரை ஒப்பிட முடியாது, பட் நல்லா தான் செஞ்சிருக்காரு. சூர்யா பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும், ஏன்னா நம்ம ஊர்ல கலரா இருக்கவன் பொய் சொல்ல மட்டான்ற மாதிரி, கலர் கம்மியா இருக்கறவனை புத்திசாலியா ஒத்துக்க மாட்டாங்க. படத்துல ஆள் பார்க்க நல்லா இளமையா இருக்காரு.

சத்யராஜ்
போமன் இராணி லெவெலுக்கு கலக்கி இருக்காரு சத்யராஜ். அந்த வசன உச்சரிப்பு மட்டும் ஒரிஜினல் மாதிரி இருக்கணும்னு ஒரு மாதிரியா பேசறது செயற்கையா இருக்கு. அதை மட்டும் சத்யராஜ் பாணிக்கே விட்டு இருக்கலாம்.

ஜீவா
ஜீவாவும் ஷார்மன் ஜோஷிக்கு இணையா கலக்கலா பண்ணி இருக்காரு. இவரு நூறு சதவீதம் சரியானு தேர்வு இந்த ரோலுக்கு.

ஸ்ரீகாந்த்
இவரும் நல்லா தான் பண்ணி இருக்காரு ஆனா மாதவன் அளவுக்கு இல்லை. இருந்தாலும் பெருசா குறை ஒன்னும் சொல்ல முடியாது.

சத்யன்
இவரு சான்ஸ்ஸே இல்லை. ஜீவாவுக்கும் இவருக்கும் மட்டும் தான் புல் மார்க்ஸ். 3 Idiotsல இந்த ரோல் ரொம்ப முக்கியமானது. இதை இவர விட்டா வேற யாரும் இவ்வளோ நல்லா பண்ணி இருக்க முடியாது.

இலியனா
படத்துல இருந்த ஒரே குறை இவங்க தான். சில இடத்துல பார்க்க முடியலை. குரூப்பா டான்ஸ் ஆடும் போது இவங்கள கண்டு பிடிக்கவே கஷ்டமா இருக்கு. ஒரு காட்சியில இவங்க பேசற லோக்கல் தமிழ் ரொம்ப கொடுமை. வேற யாரையாச்சும் போட்டு இருக்கலாம்.

மத்தப்படி ஒளிப்பதிவு ரொம்ப அருமை. இசை பரவா இல்லை. அஸ்கு லஸ்கா பாட்டு மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. இடைவேளைக்கு அப்புறம் வர பாட்டெல்லாம் கடுப்பேத்துற மாதிரி இருந்துது.

3 Idiots பார்க்கலைன்னா, கண்டிப்பா பார்க்கலாம். இதை தான் பார்க்கணும்னு இல்லை, ஹிந்தி தெரிஞ்சா 3 Idiotsயே பாருங்க.

Thursday, December 8, 2011

ஒஸ்தி பத்தி....


இப்போ தான் ஒஸ்தி பாத்துட்டு வரேன். படம் ஓகே தான். இது தபாங் ஹிந்தி படத்தோட ரீமேக். ஹிந்தில மிக பெரிய ஹிட். அதுக்கு முக்கிய காரணம் சல்மான். ரொம்ப தெனாவட்டா, ஸ்டைலா பண்ணி இருப்பாரு. சிம்பு சொல்லவே வேண்டாம், ஸ்டைலோ ஸ்டைலு. போலீஸ் ரோல் இவருக்கு சரி பட்டு வருமான்னு யோஸிச்சேன், பரவா இல்லை ஓரளவுக்கு பொருந்தி இருக்கு. ஜித்தன் ரமேஷ் சிம்புவோட அண்ணனா வர்றது கொஞ்சம் ஓவர். வேற யாரையாச்சும் போட்டு இருக்கலாம்.

சந்தானம், மயில்சாமி, தம்பி ராமையா எல்லாரும் சேர்ந்து சிம்புவோட ஒரே ரகளை. படம் முழுக்க ஜாலியா தான் போகும். தபாங் படம் பாக்காதவங்களுக்கு இன்னும் நல்லாவே போகும். ரிச்சாவுக்கு மயக்கம் என்ன படத்துல நடிக்க எவ்வளோ நல்ல ஸ்கோப்போ அதுக்கு நேர் மாறா இந்த படத்துல பெருசா ஒன்னும் இல்ல. எண்ணி ஒரு நாலு டயலாக், அவ்வளோ தான். ஆனா நல்லா தான் இருக்காங்க:) நிறைய நேரம் கண்ணுலயே பேசிடறாங்க. சோனு சூத் தான் படத்தோட வில்லன். தபாங் படத்துலயும் இவர் தான் வில்லன். இவருக்கு பொருத்தமான ரோல் தான். சல்மான் ஒடம்புக்கு இவரு ஒடம்பு பொருத்தமா இருக்கும். இவரு ஒடம்ப காட்டறாருன்னு சிம்பு கடைசி சண்டையில ஒடம்ப காட்டறது சின்ன புள்ள தனமா இருந்தது. சிரிப்பு தான் வந்துது.

படத்துல பாட்டு எல்லாம் சூப்பர். வழக்கம் போல சிம்பு கலக்கல் டான்ஸ். இவரு இருந்தா தான் பாட்டே கலை கட்டுது. கலாசலா பாட்டு ஆரம்பத்துல டான்ஸ் எல்லாம் ஒன்னும் பெருசா தெரியல. சிம்பு உள்ள வந்த உடனே தான் ஒரு வேகமே வரும். இந்த பாட்டுக்கு தான் தியேட்டர்ல பயங்கரமான விசில். படத்துல பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம் வசனம். யாரு எழுதினான்னு தெரியல ஆனா நல்லா இருந்தது. படத்துல எல்லாரும் பேசுற ஸ்லாங் கொஞ்சம் உறுத்தலா இருக்கும். சிம்பு வில்லன் கிட்ட எவ்வளோ நாள் தான் நான் கெட்டவனாவே நடிக்கிறதுன்னு சொல்லுற டயலாக் அஜித்தை ஞாபகபடுத்தும். படம் முழுக்க இது மாதிரி நக்கலா நிறைய வசனங்கள். ஆரம்பத்துல அம்மாவை வேற இழுத்து இருப்பாங்க. இது யாரோட யோசனைன்னு தெரியல.

நோ பெரிய செண்டிமெண்ட்ஸ், நோ கருத்து கந்தசாமீஸ், நோ ஓவர் பில்ட்-அப்ஸ்....சும்மா குடும்பத்தோட ஜாலியா டைம் பாஸ் பண்ண இந்த படம் பாக்கலாம்.

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - ஷார்ப்பு

பல மாதங்களுக்கு பின் ஒரு பதிவு போடலாம்னு தோனுச்சு. இத்தனை நாள் கண்ணா பின்னாவென்று ஆணி புடுங்கியதால் பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. அது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வந்து கணினியில் உட்கார என் ஒன்றரை வயது மகளும் அனுமதிப்பதில்லை.(என் மனைவி மட்டும் எப்படி தான் facebookல game ஆடறாலோ:) வருட கடைசி என்பதால் இப்போ ஆணி புடுங்கற வேலை கொஞ்சம் கம்மிதான். இருப்பினும் இந்த பதிவை வீட்டில் இருந்து தான் எழுதுகிறேன், என் மகள் தூங்கிய பின். இப்போ தான் மன்மதன் அம்பு முதல் நாள் முதல் காட்சி பார்த்துட்டு வரேன். சரி இந்த படத்தின் விமர்சனத்தையே போட்டுடலாம்னு எழுத ஆரமிச்சிட்டேன்.

இந்த படம் நாளை தான் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. இங்கு (சிங்கப்பூரில்) எப்போதும் ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகி விடும். எந்திரனும் இப்படி தான் பார்த்தோம். ஆனால் எந்திரன் இணையதளம் வழியாக பதிவு செய்யும் பொழுது முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. இந்த படத்திற்கோ வெறும் எட்டு சீட்டுகளே பதிவாகி இருந்தது. இது கொஞ்சம் யோசிக்க வைத்தது, இருப்பினும் கமல், கே.ஸ். ரவிக்குமார் காம்பினேஷன் ஆச்சே. சரின்னு புக் பண்ணிட்டேன்.

படம் சூப்பரா இருந்ததுன்னு சொல்வதை விட நல்ல டைம் பாஸ், நல்லா மனசு விட்டு சிரிக்க முடிஞ்சிது. தெனாலி, பஞ்சதந்திரம் அளவுக்கு காமெடி இல்லைனாலும் படம் நல்லா தான் இருந்தது. கண்டிப்பா ஹிட் ஆகும். கமலோட நடிப்பு ரொம்ப எதார்த்தம். உண்மைய சொன்னா படம் முழுக்கவே ரொம்ப யதார்த்தமா தான் இருந்தது. ரொம்ப சினிமாத்தனமா தெரியல.

படத்துல ஒரு நடிகையாகவே வராங்க த்ரிஷா. அதனால சூர்யா ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் வேற. த்ரிஷாவ காதலிச்சு கட்டிக்க போற வேஷத்துல மாதவன். இவங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை வந்து பிரிஞ்சு போறாங்க. தன் தோழி சங்கீதாவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் த்ரிஷாவை வேவு பார்க்க மாதவன் அனுப்பும் நபர்தான் கமல். முன்னாள் ராணுவ மேஜர்.

ரமேஷ் அர்விந்த் கமலின் நண்பராக வந்து கலக்கி இருக்கார். இதுவரை அவர் நடித்ததிலேயே எனக்கு பிடிச்சது இதுதான். ரொம்ப இயல்பா செய்திருந்தார். முதல் காட்சியிலேயே கண்களை கலங்க வைத்து விட்டார். கமலுக்கும் இவருக்கும் உள்ள நட்பை மிக மிக அழகாக காட்டி இருந்தார்கள்.

இன்னொரு விஷயம் த்ரிஷா உள்பட படத்துல எல்லோரும் சொந்த குரலிலேயே பேசி இருக்கிறார்கள். த்ரிஷா கவிதை சொல்வது மட்டும் கொஞ்சம் காமெடியா இருந்துச்சு, மற்றபடி ஓகே. மாதவன் வழக்கம் போல நல்லா பண்ணி இருக்கார். கமல் படத்துல இவர் எப்பவுமே கலக்குவார். த்ரிஷாவும் ரொம்ப இயல்பா நடிச்சிருக்காங்க. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரியுது. சங்கீதா முதல் பாதியில் சும்மா ஒப்புக்கு சப்பா மாதிரி தெரிஞ்சாலும், இரண்டாவது பாதியில் கலக்கிட்டாங்க. அவங்க பயனா வர வாண்டும் நல்லா பண்ணி இருக்கான்.

அப்புறம் கலவாணி புகழ் ஓவியா கொடுத்த பில்ட்-அப்ப பார்த்தவுடனே, அவங்க தான் இரண்டாவது கதாநாயகி என்று நினைத்தேன். கடைசீல அவங்க படத்துல வாம்மா மின்னல் மாதிரி தான் வந்துட்டு போறாங்க. அவங்க வர்றது ரெண்டே காட்சி, அதுல அவங்க டயலாக் பேசுன மாதிரி ஞாபகமே இல்லை. Cochin ஹனீபா இல்லாத குறையை ஒரு புது மலையாள நகைச்சுவை நடிகர் ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கார். இருப்பினும் அவர் செய்வது ஹனீபாவையே நினைவூட்டுகிறது.

இந்த படத்துக்கு கமலே வசனம் எழுதி இருக்காரு Crazy மோகன் கிடையாது. அதனால வசனங்கள்ல அந்த கடி ஜோக்ஸ் இல்லை, புத்திசாலி தனமா இருந்துச்சு. உதாரணத்துக்கு பொண்ணுங்க மனசு தனக்கு 33% ஆவது புரியும்னு த்ரிஷாவிடம் சொல்லுவது. நீல வானம் பாடல் மனதை வருடுகிறது. கமலின் பிளாஷ் பேக் முழுவதும் ஒரு பாடலில் பின்னோக்கியே காட்டி இருக்கிறார்கள். இது ரொம்ப வித்தியாசமாக, நல்லா இருந்துச்சு. வெளி நாடுகளில்(France, Venice etc) மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் படம் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய படம். கமல் படம் என்று பயப்படாமல் சின்ன பசங்களையும் கூட்டிட்டு போகலாம்:)

Monday, February 1, 2010

குழுப் போட்டி - சிங்கை குழு (Uniquely Singapore)

குழு போட்டிக்காக சிங்கை குழுவின் செயல்பாடுகளையும், தற்போதைய நிலவரத்தையும் தெரிவிப்பதற்காகவே இந்த பதிவு. குழு போட்டியில் வேறு ஏதும் முன்னேற்றம் இருப்பதாக தெரியல, அதான் இப்படி ஒரு பதிவ போட்டு தெரிஞ்சிக்கலாம்னு....

சிங்கை குழுவில் நாங்க ஒரு எட்டு பேர் இருக்கோம். என்னை ஒருங்கினைப்பாளரா, நாம எல்லாரும் சேர்ந்து பண்ணுவோம்னு நான் சொல்லியும் கேட்காம தேர்வு செஞ்சிட்டாங்க;) இப்போ தான் எதுக்குன்னு புரியுது....இவங்க எல்லாரையும் ஒருங்கிணைப்பது ரொம்ப கஷ்டமப்பா:)

சரி இந்த போட்டிக்காக நாங்க போட்ட திட்டம் இது தான்.
1. முதலில் நாங்க தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஒரு குழு மின்னஞ்சல் முகவரி உருவாக்குதல். (pit-singapore@googlegroups.com)
2. படங்களை பதிவேற்ற பிலிக்கர் மற்றும் பிகாசாவில் ஒரு பொது ஆல்பம் உருவாக்குதல்.

http://www.flickr.com/photos/uniquelysingapore/

http://picasaweb.google.com/unique.singapore


3. அனைவரும் முதலில் தங்களது படங்களை பிலிக்கரில் பதிவேற்ற வேண்டும். அதை நாங்கள் எங்களுக்குள் விமர்சனம் செய்து கொள்வோம்.
4. பின்னர் ஒரு rating வைத்து டாப் 50 படங்களை பிகாசாவில் பதிவேற்றி, அதை போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

சிங்கப்பூர் பற்றி ஒரு போட்டோ புக் போடணும்னா, முழு சிங்கப்பூரையே இந்த ஐன்பது படங்களில் அடக்க வேண்டும். அதற்காக எங்களால முடிஞ்ச வரைக்கும் இங்குள்ள அணைத்து இடங்களையும், இங்கு வாழும் பல்வேறு இன மக்கள், அவர்களின் விழாக்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை இதில் அடக்க முயற்சிக்கிறோம்.

நாங்க ஒரு இரண்டு, மூன்று பேர் சேர்ந்து இதுவரை 54 படங்களை பிலிக்கரில் பதிவேற்றி இருக்கோம். மற்றவர்களும் இனிமேல் பதிவேற்றுவார்கள் (செய்வீங்க இல்ல?;)

எங்க குறிக்கோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். யார் இந்த போட்டில கலந்துக்கலைன்னாலும், நாங்க தனித்து போட்டியிட்டாவது எப்படியாவது முதல் இடத்தை பிடித்து விட வேண்டும்:)

Thursday, May 21, 2009

நடிகர் சிரஞ்சீவி தேர்தலில் தோற்றது ஏன்?

ஆந்திராவில் நடந்த தேர்தலில் சிரஞ்சீவி கட்சி 294 தொகுதிகளில் வெறும் 18 சட்டசபை தொகுதிகளில் தான் வென்றது. ஒரே ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.

இவர் தோல்வியை இவரது ரசிகர்களே பல இடங்களில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி உள்ளனர். ஏனென்றால் இவர் அரசியலில் வெற்றி பெறுவதற்கு முன்பே சட்டசபை தொகுதிகளில் அவரது கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு மூன்று முதல் ஐந்து கோடி வரை வாங்கி இருக்கிறார். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒவ்வொரு தோற்றுப்போன கட்சியும் கண்ணா பின்னாவென்று யோசித்து கொண்டிருக்க, இவர் மட்டும் தனது கட்சியின் தோல்விக்கான காரணத்தை அறிய ஒரு புதிய முறையை கையாண்டிருக்கிறார்.

அவர் தோல்விக்கான காரணம் பற்றி அறிய 10 வாஸ்து ஜோதிட நிபுணர்களை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கட்சி அலுவலகம் முழுவதும் பார்வையிட வைத்திருக்கிறார். அவர்கள் சிரஞ்சீவியிடம், நீங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு எந்த வழியை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் பின்புற வழியை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே வாஸ்து நிபுணர்கள் அவரிடம், முதலில் பின்புற வழியை அடைத்து விடுங்கள். நீங்கள் கட்சி அலுவலகத்தில் பின்புற வழியை பயன்படுத்தியது தான் தோல்விக்கு காரணம். இனி நீங்கள் முன்புற வழியை மட்டுமே பயன் படுத்தவேண்டும் என்றனர். மேலும் அலுவலகத்தில் சிரஞ்சீவி அமரும் திசைகளையும் மாற்றினர். மேலும் அவரைப்பார்க்க வரும் தொண்டர்கள் காத்திருக்கும் அறையிலும் சிறிது மாற்றம் செய்தனர். பின்னர் வாஸ்து நிபுணர்கள் சிரஞ்சீவி அலுவலகத்தில் உள்ள வாஸ்து குறைபாட்டை சரி செய்து விட்டதாகவும், அடுத்த தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளனர். அடப்பாவீங்களா!

நல்ல வேளை ஆந்திரால ஒரு கண்ணகி சிலை இல்லை. இருந்திருந்தா இன்னொரு புது பிரச்சனை வந்திருக்கும் போல! எதற்கும் கையை நீட்டிட்டு நிக்கிற மாதிரி ஏதாச்சும் என்.டி.ஆர். சிலை இருக்கானு பாருங்க. என்ன இருந்தாலும் நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இதை கவனிக்கவும். உங்க அலுவலகத்தில் கூட வாஸ்து பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறேன். அட உங்க அலுவலகத்தை தான் பாதி இடிச்சிபுட்டாங்களே...ஒரு வேளை அது தான் காரணமோ? நல்லா பிளான் பண்ணி தான்யா செஞ்சிருக்காய்ங்க!

Saturday, March 21, 2009

என்ன அழகு எத்தனை அழகு!

அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.

இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.

இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(




Saturday, November 1, 2008

இவங்க இன்னும் திருந்தலையா?

ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தியா போச்சு! அதான் வலைப்பூ பக்கம் வர முடியல. தினமும் இந்த பேங்க் ஊத்திகிச்சு, அந்த பேங்க் ஊத்திகிச்சுன்னு சொல்லி பீதிய வேற கிளப்பறாங்க. அடுத்த வருஷம் இதை விட மோசமா இருக்கும்னு வேற சொல்றாங்க. இந்த மாதிரி நிலமையில ஓபாமா வந்து என்ன செய்ய போறாரோ?


இப்போவெல்லாம் டிவி கூட அவ்வளவோ பார்க்கறது இல்ல. அப்படியே பார்த்தாலும் விஜய் டிவி தான். சரி, சன் டிவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, எப்படி போயிட்டிருக்குன்னு பார்ப்போம்னு ஒரு நாள் சும்மா சேனலை மாத்தி பார்த்தேன். ஏதோ ஒரு மெகா சீரியல் போயிட்டிருந்துது. ஒரு அம்மா கீழ ஒக்காந்துட்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அவங்க பையன் அவங்களை சாப்பிட கூப்பிடறான். அதுக்கு அந்த அம்மா, "அக்கா ஜெயில்ல இருக்கும் போது எப்படிடா சாப்பிட முடியும்?னு" சொன்னாங்களோ இல்லையோ, வுடுங்கடா சாமின்னு சேனலை மாத்திட்டேன்!


அடப்பாவீங்களா....இன்னும் இந்த மாதிரி தான் ஓட்டிட்டு இருக்கீங்களா? கீழ இருக்க இந்த வீடியோ காட்சியை பாருங்க. இதுல பேசிட்டு இருக்கறது ஒரு பாட்டியும் அவங்க பேத்தியும். இரண்டு பேறும் கணவனை இழந்தவர்கள். ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க;)


Monday, September 15, 2008

PiT மெகாப் போட்டி 2008 ~ இறுதிச் சுற்று!

போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு

இன்றோடு பிட் மெகா போட்டியில் பங்கு பெற கடைசி தினம் என்பதால், நினைத்ததை எடுக்க முடியாமல், எடுத்ததை பதித்து விட்டேன்.

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.


Seoul Palace



London Westminster

Pagodas

Petronas Tower

மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Wednesday, August 13, 2008

குசேலன் - ஒரு திருவிளையாடல்

திருவிளையாடலுக்கும், குசேலனுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒன்னும் இல்ல. சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து, எனக்கு கிடைத்த நம்பத்தகுந்த செய்தி இது. அதாவது இந்த குசேலன் படம் சூப்பர் ஸ்டாரின் திருவிளையாடல்களுள் ஒன்றாம்.

எல்லா சக நடிகர்களும்(தேவர்களும்), சில அல்லக்கைகளும் சென்று சூப்பர் ஸ்டாரிடத்தில் முறையிட்டுள்ளனர். தங்கள் படங்கள் சூப்பராக இருந்தும் சுமாராகவே ஓடுகிறதாகவும், டீ ஆத்தறவனெல்லாம் திரை விமர்சனம் பண்ணி படத்தை ஓட விடாம பண்ணிடரதாகவும், இதற்கு சூப்பர் ஸ்டார் தான் ஒரு வழி பண்ண வேண்டும் என்றும் முறையிட்டுள்ளனர். குருவி, இந்திரலோகத்தில் ந அழகப்பன், அரசாங்கம் போன்ற பல படங்கள் இதனால் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிவாஜி, தசாவதாரம் படம் கூட நல்லா இல்லைன்னு பலர் எழுதி இருப்பதை அவரிடத்தில் காட்டி இருக்கிறார்கள்.

வெகுண்டு எழுந்த ரஜினியும் உண்மையிலேயே ஒரு மட்டமான படம்னா அது எப்படி இருக்கும்னு மக்களுக்கு புரிய வைக்க தீர்மானித்தார். இப்படி தீர்மானித்தவுடனே அவரின் மனதில் தோன்றிய முதல் இயக்குனர் பி.வாசு தான். இருப்பினும் பேரரசுவும் பி.வாசுவுக்கு ஒரு நல்ல போட்டியாக இருந்திருக்கிறார். ஆனால் பேரரசு தன் கதைக்கு கண்டிப்பாக 'பெங்களூரு' என்று தான் பெயர் வைப்பேன் என்று அடம் பிடித்ததால் அடித்தது யோகம் பி.வாசுவிற்கு. பி.வாசுவும் தன் கையில் கிடைத்த பூ மாலையை சும்மா பிரிச்சி மேய்ந்திருக்கார். நடிப்பிற்கு பசுபதியும், எரிச்சலுக்கு வடிவேலுவும், கடுப்பிற்கு மீனாவும், அறுவைக்கு மற்ற எடுபிடிகளும், ஆறுதலுக்கு சூப்பர் ஸ்டாரும், கிளு கிளுப்பிற்கு நயன்தாராவும், ஒப்புக்கு சப்பாவிற்கு பிரபுவும் இருக்க மொக்கையான இசையுடன் படு மொக்கையா எடுத்த படம் தான் குசேலன்.

இப்படி ஒரு படம் எடுக்க செய்து, தனது இந்த திருவிளையாடல் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் சூப்பர் ஸ்டார். படத்தை பார்த்திருந்தீங்கனா உங்களுக்கு அது புரியும். பலர் இந்த படத்தை பார்த்து விட்டு குருவியை கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று சொல்வதே இதற்கு சான்று.

இதை எல்லாம் தெரியாமல் அப்பாவியாக சென்று படத்தை பார்த்து விட்டு வந்தவன் நான். இதற்கு காரணம் இந்த விமர்சனம் தான். நான் முதன் முதலாக குசேலனை பற்றி படித்த விமர்சனம்:

Stupendous! Marvelous! Wordless! It’s so surprising to see that Director Vasu has churned out a best movie in his entire career.......
Verdict: Strictly recommended to watch

எந்த புண்ணியவானோ படத்தை பார்த்துட்டு, வேணும்னே இப்படி எழுதி பல பேரை சிக்க வச்சிருக்கார். நல்லா இருங்கையா! "First impression is the best impression" இல்லையா! நானும் இதுக்கு அப்புறம் சில நேர்மாறான விமர்சனங்களை படித்தும் மனம் ஒத்துகொள்ள முடியாமல்(தலைவர் படமாச்சே) படத்துக்கு போயிட்டேன். கடைசியில் பட்டால் தான் தெரியும் என்பது நிஜமாகி விட்டது.

படத்துக்கு எனது நண்பர்களையும் அழைத்து சென்றிருந்தேன். நண்பர் ஒருவரின் ஐந்து வயது மகனை முதல் முறையாக திரையரங்கிற்கு அழைத்து சென்றோம். அவன் 'சிவாஜி' படத்தை நல்லா ரசித்து பார்த்தான் என்று சொன்னார்கள். சரி என்று அவனை தைரியமாக அழைத்து சென்றோம். படம் ஆரமிச்சு ஒரு அறை மணி நேரம்தான் இருக்கும், பையன் தூங்கிட்டான். இனிமே அவன் படம் பார்க்க கூட்டிகிட்டு போனா வருவானா?

படம் முடிஞ்சி நைட் வெளிய வரும்போது மணி பத்து. வெளியில அடுத்த ஷோ பார்க்க ஆவலா நின்னுகிட்டு இருந்தவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருந்துச்சு. பின்ன, நாங்களாச்சும் ஏழு மணி ஷோ, அதுக்கே எங்களால முடியல.

இது வரை இப்படி ஒரு மொக்கை படத்தை நான் தியேட்டர் சென்று பார்த்ததே இல்லை. ஒரு டாகுமெண்டரி படம் கூட இன்னும் நல்லா இருந்திருக்கும். பி.வாசு வாழ்க! நான் தலைவர் படத்தை பற்றி இப்படி எழுதுவேன் என்று நினைக்கவேயில்லை:( மொத்தத்தில், குசேலன் = இரண்டு வீராசாமி!

Saturday, July 26, 2008

1992ல் ஒரு நாள்

அம்மா காலைல ஏழு மணிக்கு சரியா எழுப்பிடுங்கனு சொல்லிட்டு தூங்க சென்றான் ராமு. அவன் சென்ற அடுத்த நிமிடம், அவன் சொன்னதை டிவி பார்த்து கொண்டே கேட்டு கொண்டிருந்த அவனது அண்ணன் சோமு தன் அம்மாவிடம் ஓடி வந்து, "அம்மா என்னையும் ஏழு மணிக்கு எழுப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு தூங்க சென்றான்.

மறுநாள் காலை தனது உள்ளுணர்வு எழுப்பி விட 6.45 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. பின்னர் அம்மா வந்து எழுப்பியதும் எழுந்த ராமு, சோமு ஏற்கனவே எழுந்து விட்டதை பார்த்து கடுப்பாகி போனான். இவர்களை காம்பிளான் குடிப்பதற்காக பல் துலக்க சொல்லி அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காமல் மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.

கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அவர்களின் முகத்தில் தெரியும் பரபரப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ராமு சற்று வேகமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தனது இறந்து கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு நின்றிருந்தான். ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் அவசரத்தை(புரியுதில்ல?) அடக்க முடியாதுன்னு சொல்வாங்க இல்ல, ஆனால் ராமு அவனது இந்த உத்தியின் மூலம் அதையும் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணியோசை அடிக்கும் சப்தம் கேட்டு இருவரும் விழுந்ததித்து கொண்டு கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். முட்டி மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கொண்டு ஓடி சென்றவர்கள் அதே வேகத்தில் உள்ளே ஓடி வருகிறார்கள். முதலில் வந்த சோமு(பெரியவன் ஆயிற்றே) ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்கிறான்.

தனக்கிருந்த முழு கடுப்பில் அழுது கொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டான் ராமு, "அம்மா! பாரும்மா சிறுவர் மலரை சோமு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போயிட்டாமா. தர சொல்லுங்கம்மா!"

(பி.கு. இதுல வர அந்த சோமு நான்தாங்க. இந்த சிறுவர் மலருக்காகவே எங்க அப்பா கிட்ட கேட்டு, அந்த ஒரு நாள் மட்டும் தின மலர் வாங்குவோம். அதுக்கு அப்படி ஒரு சண்டை போடுவோம்;)